திருச்சி எனப்படும் திருச்சிராப்பள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டமாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்த பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.
சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் புராதன அணைக் கட்டுகளாகும். திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக் கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.
மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.
மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், வெக்காளி அம்மன் திருக்கோயில், திருவானைக்காவல் சம்புகேசுவரர் திருக்கோயில், வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவை திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய திருத்தலங்கள் ஆகும்.
மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், முக்கொம்பு, கல்லணை, வயலூர் முருகன் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவை முக்கிய சுற்றுலா தலங்களாகவும் விளங்குகின்றன.
திருச்சியில் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அவற்றுள், தேசிய தொழில்நுட்பக் கழகம், ஜமால் மொகமது கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, தூய வளனார் கல்லூரி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு காலேஜ் ஆப் இன்ஜினியரிங், உருமு தனலட்சுமி கல்லூரி, ஏ.ஏ. அரசு கலைக் கல்லூரி, கலை காவேரி கலை அறிவியல் கல்லூரி, காவேரி கலை அறிவியல் கல்லூரி, கிருத்துராஜ் கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி, தூய சிலுவை கல்லூரி, தேசிய கல்லூரி, பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி, ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, ஜெ. ஜெ. காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்டு டெக்னாலஜி போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.
புதன், 28 ஏப்ரல், 2010
திருச்சிராப்பள்ளி


0 comments:
கருத்துரையிடுக