சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

புதன், 28 ஏப்ரல், 2010

வினைச்சொல்

    வினைச்சொல்லைப் பொறுத்தவரை சங்ககாலத் தமிழ் சில
குறிப்பிடத்தக்க மாற்றங்களைத்     தவிரப் பெரும்பாலும்
தொல்காப்பியர் காலத் தமிழாகவே உள்ளது. தெல்காப்பியர்
ஒவ்வொரு வினைமுற்றுக்கும் உரிய விகுதிகள் பற்றி மிகவும்
விரிவாகக் கூறுகிறார். சங்ககாலத் தமிழில் அவ்விகுதிகளுள் பல
வழங்குவதையும் ஒரு சில வழக்கிழந்து போனதையும் அறிய
முடிகிறது. மேலும் சில புதிய வினைமுற்று விகுதிகளும்
காணப்படுகின்றன. தமிழ்மொழியின் தொடர் அமைப்பி்ல்
வினையெச்சம், பெயரெச்சம் ஆகியன இன்றியமையாத இடம்
பெறுகின்றன. இவற்றிற்கு உரிய வாய்பாடுகள் பற்றித்
தொல்காப்பியர் விரிவாகக் குறிப்பிடுகிறார். இவை யாவும்
சங்கத்தமிழில் காணப்படுகின்றன. மேலும் சில புதிய
வாய்பாடுகளும் காணப்படுகின்றன.

5.4.1 தன்மை வினைமுற்று
    தொல்காப்பியர், தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளாக,
கு, டு, து, று, என், ஏன், அல் ஆகிய ஏழு விகுதிகளைக்
கூறுகிறார். இவை யாவும் சங்கத் தமிழில் வழங்குகின்றன. டு, து,
று 
ஆகிய விகுதிகள் இசின் என்ற அசைச்சொல்லோடு சேர்ந்து
வழங்குகின்றன. மேலும் தொல்காப்பியர் கூறாத அன் என்னும்
புதிய விகுதியும் சங்ககாலத் தமிழில் வந்து வழங்குகிறது.


டு
- பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசின் 
        (புறநானூறு, 150 : 24)
து
- ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே        (அகநானூறு, 38: 18)
று
- கண்ணும் படுமோ என்றிசின் யானே 
        (நற்றிணை, 61 : 10)

கேட்டிசின்= கேட்டேன் ;
மறந்திசின்மறந்தேன் ;
என்றிசின்= என்றேன் ;

  • அன்

  •     அன் என்பதைத் தொல்காப்பியர் படர்க்கை ஆண்பால்
    ஒருமை வினைமுற்று விகுதியாக மட்டுமே கூறுகிறார். ஆனால்
    இது, சங்ககாலத் தமிழில் தன்மை ஒருமை வினைமுற்று
    விகுதியாகவும் வழங்கப்படுகிறது.


    உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து
    உரைக்கல் உய்ந்தனனே    
    (நற்றிணை, 17: 8-9)

  • ஓம்

  •     தன்மைப்     பன்மை     வினைமுற்று விகுதிகளாகத்
    தொல்காப்பியர் கும், டும், தும், றும், அம், ஆம், எம், ஏம் 
    ஆகிய எட்டு விகுதிகளைக் கூறுகிறார். இவற்றுள் சங்ககாலத்
    தமிழில் டும் என்பது மட்டும் வழங்கவில்லை. பிற ஏழு
    விகுதிகளும் வழங்குகின்றன. மேலும் ஓம் என்ற புதிய விகுதி
    இரண்டு இடங்களில் வழங்குகிறது.


    ஓம் - மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே 
             (ஐங்குறுநூறு, 112: 4)

    5.4.2 முன்னிலை வினைமுற்று
        தொல்காப்பியர், முன்னிலை ஒருமை வினைமுற்று
    விகுதிகளாக இ, ஐ, ஆய் ஆகிய மூன்றையும் பன்மை
    வினைமுற்று விகுதிகளாக இர், ஈர், மின் ஆகிய மூன்றையும்
    குறிப்பிடுகிறார். இவை சங்ககாலத் தமிழிலும் வழங்குகின்றன.
    மேலும் ஈம்என்பது ஒரு புதிய விகுதியாக வழங்குகிறது.

        செய்யுளுள் ஆய் விகுதி ஓய் எனத்திரிந்து வழங்கும்.
    மொழியியலார் இதனைத் தனி விகுதியாகக் கொள்வர்.

    ஓய்- பிறந்தோய் (பிறந்தாய்) (புறநானூறு, 164 : 13)
    ஈம்- தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே 
            (அகநானூறு, 218 : 22)

    இகர விகுதியோடு இசின் எனும் அசைச் சொல் சேர்ந்து வரும்
    வினைமுற்றுகள் பல காணப்படுகின்றன.

    கண்டிசின் (காண்பாய்) (அகநானூறு, 99 : 11)

    5.4.3 படர்க்கை வினைமுற்று
        தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள படர்க்கை ஐம்பால்
    வினைமுற்று     விகுதிகள் அனைத்தும்     சங்ககாலத்தில்
    வழங்குகின்றன. அவை அன், ஆன், அள் ஆள், அர் ஆர், ப, 
    மார் 
    என்பனவாகும். இவற்றுடன் இவற்றின் திரிபுகளாகிய 
    ஓன், ஓள், ஓர்
     என்பனவும் சங்கத்தமிழில் வழங்குகின்றன.

        (எ.டு)

    வந்தோன்(நற்றிணை, 114 : 6)
    நோக்கியோள்(நற்றிணை, 55 : 9)
    சென்றோர்(அகநானூறு, 387 : 20)

    இத்திரிபுகள் இசின் என்ற அசைச் சொல்லுடன் சேர்ந்தும் வரும்.
        (எ.டு)

    புகழ்ந்திசினோனே (புகழ்ந்தான்) 
            (அகநானூறு, 210 : 10)


  • இரட்டைப் பன்மை விகுதி - அர் - கள்

  •     சங்ககாலத் தமிழில் அரசர்கள், ஐவர்கள் போன்ற
    உயர்திணைப் பெயர்ச்சொற்கள் அர்-கள் என்னும் இரட்டைப்
    பன்மை விகுதிகள் பெறவே. அச்சொற்கள் கொண்டு முடியும்
    வினைமுற்றுகளும் ஆர்-கள் என்னும் இரட்டைப் பன்மை
    விகுதிகள் பெற்று வழங்கத்தொடங்கின. இத்தகு வினைமுற்று,
    கலித்தொகையில் மட்டும் ஓரிடத்தில் வழங்குகிறது. 
        
    வாழ்வார்கள்     (கலித்தொகை, 145 : 17)


  • அஃறிணை ஒருமை, பன்மை விகுதிகள்

  •     அஃறிணை ஒருமை வினைமுற்று விகுதிகள் - து, டு, று ;
    பன்மை விகுதிகள் அ, ஆ, வ என்பன. இவற்றில்
    தொல்காப்பியர்காலத் தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்கும்
    இடையே மாற்றம் இல்லை.

    5.4.4 வியங்கோள் வினைமுற்று
        வியங்கோள் வினைமுற்று, படர்க்கையில் மட்டுமே வரும்.
    தன்மையிலும் முன்னிலையிலும் வாராது என்கிறார் தொல்காப்பியர்
    (தொல்.சொல். 228), ஆனால் சங்ககாலத்தில் படர்க்கையில்
    மட்டுமன்றித் தன்மை, முன்னிலை ஆகிய இடங்களிலும் வருகிறது.
    க, இய, இயர் ஆகியன வியங்கோள் வினைமுற்று விகுதிகளாக
    வந்துள்ளன. வாழ்த்தல், வைதல், வேண்டுதல், விதித்தல் ஆகிய
    பொருள்களில் வியங்கோள் வினைமுற்று வருகிறது. 
        
    இவள் தந்தை வாழியர் (நற்றிணை, 8 : 4)

    என்ற வரியில் வாழியர் (வாழ்க) எனும் வியங்கோள் வினைமுற்று
    படர்க்கையில் வந்துள்ளது.

        
    பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக 
            (புறநானூறு, 71 : 5-6)

        (பிரிக = பிரிவேனாக)
        இங்குப் பிரிக என்பது தன்மையில் வந்துள்ளது.     
    வல் விரைந்து செல்க பாக ! நின் நெடுந்தேர்        (அகநானூறு, 204 : 8-9)

    இங்குச் செல்க என்பது முன்னிலையில் வந்துள்ளது.
    5.4.5 வினையெச்சம்
        தொல்காப்பியர் சொல்லதிகாரம் வினையியலில், செய்து,
    செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின்,
    செய, செயற்கு
     என்னும் ஒன்பது வினையெச்ச வாய்பாடுகளைக்
    கூறுகிறார். (தொல்.சொல். 228) மேலும் அவர் பத்தாவது
    வினையெச்ச வாய்பாடாக, செய்யா என்னும் வாய்பாட்டையும்
    கூறுகிறார் (தொல்.எழுத்து. 223). இது அமைப்பில் எதிர்மறை
    போலக் காணப்படினும் உடன்பாட்டுப் பொருளையே தரும்.
    சங்ககாலத் தமிழில் இப்பத்து வாய்பாட்டு வினையெச்சங்களும்
    பயில்கின்றன. செய்து, செய என்னும் வினையெச்ச வாய்பாடுகள்
    மிகுதியாகப் பயில்கின்றன. 
        
    செய்து
    - இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே 
            (குறுந்தொகை, 34 : 3
    )
    செய்தென
    - மெல்லம் புலம்பன் பிரிந்தென 
            (குறுந்தொகை, 5 : 4)
    செயின்
    - வேம்பின் பைங்காய் என் தோழி தரினே     (குறுந்தொகை, 196 : 1-2)
    செய
    - அலமரல் வருத்தம் தீர (நற்றிணை, 9 : 3)

    (பிரிந்தென = பிரிந்ததால் ; தரின் = தந்தால்)
        செய்யா - இவ்வாய்பாடு சங்ககாலத் தமிழில் உடன்பாடு,
    எதிர்மறை என்னும் இரு பொருளிலும் வழங்குகிறது.

    உடன்பாடு

    - நுதிவேல் கொண்டு நுதல் வியர் துடையா(துடைத்து எனும் பொருள் - உடன்பாடு)    (புறநானூறு : 349)
    எதிர்மறை
    - பொழில் கொளக் குறையா மலர (குறையாமல் எனும் பொருள்- எதிர்மறை)         (பரிபாடல், 8 : 92)

        சங்ககாலத் தமிழில் தொல்காப்பியர் குறிப்பிடாத அல்லது
    அவர் காலத்தில் வழங்காத வினையெச்ச வாய்பாடுகள் சிலவும்
    காணப்படுகின்றன.

    (1) செய்வான், செய்பான் என்னும் இருவகை வாய்பாட்டு
        வினையெச்சங்கள் காணப்படுகின்றன.

    நீ்க்குவான் பாய்வாள்     (பரிபாடல், 7 : 57) 
    காண்பான் யான் தங்கினேன் (கலித்தொகை, 97 : 7)

    (2) வினையடியோடு மார் என்னும் ஈறு சேர்ந்து வரும் செய்மார்
        என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காணப்படுகின்றது.

        
    அவரே, கேடில் விழுப்பொருள் தருமார்     வாடா வள்ளி அம் காடு இறந்தோரே 
             (குறுந்தொகை, 216 : 1-2)

        (தருமார் = கொண்டு வரும் பொருட்டு)
    (3) சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ஆயின் என்னும்
        சொல வினைமுற்றைத் தொடர்ந்து நின்று வினையெச்சமாகி
         நிபந்தனைப் பொருளில் செயல்படுகிறது. 
        
    செல்வை ஆயின் செல்வை ஆகுவை 
             (புறநானூறு, 70 : 16)

        (செல்வை ஆயின் = செல்வாய் ஆனால்; செல்வை     ஆகுவாய் = செல்வத்தை உடையவன் ஆவாய்)
    (4) தொல்காப்பியர்     பெயரெச்சமும்     வினையெச்சமும்
         எதிர்மறைப் பொருளில் வரும் என்கிறார். (தொல்.சொல்.
         238) ஆனால் அதற்குரிய வாய்பாடுகளை அவர்
         கூறவில்லை. சங்கத் தமிழில் செய்யாது, செய்யாமல்,     செய்யாமை என்னும் வாய்பாடுகளைக் கொண்ட
         எதிர்மறை வினையெச்சங்கள் காணப்படுகின்றன.

    யானும் தன்னை அறியாது சென்றேன் 
            (கலித்தொகை, 51 : 8)
    கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடும் கூளி
             
    (கலித்தொகை, 1 : 3)
    சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்         (நற்றிணை, 61 : 6)
    (சொல் வெளிப்படாமை = சொல்வது வெளியில்          கேட்காதபடி)


  • வினைமுற்று வினையெச்சம் ஆதல்

  •     சங்க இலக்கியத்தில் சில பாடல்களில் இரண்டு
    வினைமுற்றுகள் அடுத்தடுத்து வருகின்றன. அவ்வாறு வரும்போது,
    முதலில் வரும் வினைமுற்று வினையெச்சப் பொருளில் வருகிறது.
    இத்தகு வினையெச்சம் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.
    பிற்காலத்தில் வந்த நன்னூலார் இதனை முற்றெச்சம் என்கிறார்.

    கண்டனம் வருகம் (கண்டு வருவோம்) 
                  (நற்றிணை, 182 : 7)
    தந்தனை சென்மோ (தந்து செல்வாயாக) 
             (ஐங்குறுநூறு, 159 : 5)

    5.4.6 பெயரெச்சம்
        தொல்காப்பியர் காலத்தில் செய்த, செய்யும் என்னும்
    இருவகை வாய்பாட்டுப்     பெயரெச்சங்களே     வழங்கின.
    சங்ககாலத்தில் இவ்விரு வகைகளோடு, செய்கின்ற என்னும்
    வாய்பாட்டுப் பெயரெச்சமும் வழங்குகிறது. இது நிகழ்காலத்திற்கு
    உரியது. முதன்முதலாகப் பரிபாடலில் ஒரே இடத்தில் மட்டும்
    வருகிறது.

    செய்த விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே 
             (குறுந்தொகை, 210 : 6)
    செய்கின்ற தீரமும் வையையும் சேர்கின்ற கண்கவின் 
             (பரிபாடல், 22 : 35)
    செய்யும் கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர் 
             (நற்றிணை, 132 : 5)

        பெயரெச்சம் எதிர்மறைப் பொருளில் வரும்போது,
    செய்யாத, செய்யா என்னும் வாய்பாடுகளில் வருகிறது. சங்க
    இலக்கியத்தில் செய்யா என்னும் வாய்பாடே     மிகுதியாக
    வழங்குகிறது. இதனை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று கூறுவர். செய்யாத என்னும் வாய்பாடு ஒரு சில இடங்களில்
    மட்டுமே வழங்குகிறது.

        
    செய்யாத - வெயில் ஒளி அறியாத விரிமலர்த் தண்கா        (கலித்தொகை, 30 : 7)
    செய்யா - பல் ஆ தந்த கல்லாக் கோவலர் 
                 (நற்றிணை, 364 : 9)

    5.4.7 காலம் காட்டும் இடைநிலைகள்
        வினைச்சொல்லின்     தலையாய இலக்கணம் காலம்
    காட்டுவது. வினைச்சொற்களில் வினை அடிச்சொல்லுக்கும்
    விகுதிக்கும் இடையே உள்ள இடைநிலைகள் என்னும் உருபுகள்
    காலம் காட்டுகின்றன. காலம் காட்டும் இடைநிலைகள் பற்றித்
    தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை.

        சங்ககாலத் தமிழில் த், ட், ற், இ ஆகியன இறந்தகால
    இடைநிலைகளாக வருகின்றன. இவற்றுள் ட், ற் ஆகிய இரண்டும்
    த் என்பதன் திரிபுகள் என மொழிநூலார் கூறுவர். த் என்பதன்
    மாற்று வடிவங்களாக த்த், ந்த் ஆகியன வழங்குகின்றன எனவும்,
     என்பது இய், இன் என்ற இரு வடிவங்களுடன்
    காணப்படுகிறது எனவும் மொழிநூலார் காட்டுகின்றனர்.


    - த்- தொழுதான்(கலித்தொகை, 55 : 19)
    - த்த்- கொடுத்த(நற்றிணை, 110 : 11)
    - ந்த்- வந்தனன்(நற்றிணை, 40 : 11)
    - ட்- கண்டனம்(குறுந்தொகை, 275 : 2)
    - ற்- சென்றார்(அகநானூறு, 31 : 12)
    - இய்- போகியோன்(குறுந்தொகை, 176 : 4)
    - இன்- அஞ்சினர்(அகநானூறு, 26 : 16)






        கின்று, ஆநின்று ஆகிய இரண்டும் நிகழ்கால
        இடைநிலைகளாக வழங்குகின்றன.

    - கின்று - ஆகின்றது 
        (நற்றிணை, 227 : 9, 
    அகநானூறு, 96 : 18)
        சேர்கின்ற (பரிபாடல், 22 : 35)
    - ஆநின்று - வாராநின்றனள் 
            (ஐங்குறுநூறு, 397 : 3)

    ப், வ், ஆகியன எதிர்கால இடைநிலைகளாக வழங்குகின்றன.     
    ப் - காண்பேன்      (நற்றிணை, 259 : 8)
    - வ் - செல்வாள்      (ஐங்குறுநூறு, 234 : 4)

    0 comments:

    கருத்துரையிடுக

    Pages 181234 »
    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More