'தொல்காப்பிய'மூல ஓலைச்சுவடியின், முதலோலை
தொல்காப்பியம்
தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும், இலக்கண நூல் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.
தோற்றம்
இது தோன்றிய காலம் பற்றிய எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கணிப்பு எதுவும் இது வரை இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதமாக இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500 க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். எனினும் இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்.
அமைப்பு
தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு அதிகாரமும் ஒன்பது பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது
எழுத்ததிகாரம்
௧) நூல் மரபு
௨) மொழி மரபு
௩) பிறப்பியல்
௪) புனரியல்
௫) தொகை மரபு
௬) உருபியல்
௭) உயிர் மாயங்கியல்
௮) புள்ளி மயங்கியல்
௯) குற்றியலுகரப் புணரியல்
சொல்லதிகாரம்
௧) கிளவியாக்கம்
௨) வேற்றுமை இயல்
௩) வேற்றுமை மயங்கியல்
௪) விளி மரபு
௫) பெயரியல்
௬) விணை இயல்
௭) இடை இயல்
௮) உரி இயல்
௯) ௭ச்சவியல்
பொருளதிகாரம்
௧) அகத்திணையியல்
௨) புறத்திணையியல்
௩) களவியல்
௪) கற்பியல்
௫) பொருளியல்
௬) மெய்ப்பாட்டியல்
௭) உவமவியல்
௮) செய்யுளியல்
௯) மரபியல்
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்
ஆறு பண்டை உரையாசிரியர்கள்
௧) இளம்பூரணர்
௨) பேராசிரியர்
௩) சேனாவரையர்
௪) நச்சினார்க்கினியர்
௫) தெய்வச்சிலையார்
௬) கல்லாடர்
நன்றி.....http://www.ta.wikipedia.org/
0 comments:
கருத்துரையிடுக