தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள் இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன. இவ்வாறே தமிழர் வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படைதமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டு ஆகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள் 1. மேடம், 2. இடபம், 3. மிதுனம், 4. கர்க்கடகம், 5. சிங்கம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.
தமிழ் மாதங்கள்
சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் கீழே தரப்பட்டுள்ளன.
மாதம் - இராசி
௧ சித்திரை - மேடம்
௨ வைகாசி - இடபம்
௩ ஆடி - மிதுனம்
௪ ஆனி - கர்க்கடகம்
௫ ஆவணி - சிங்கம்
௬ புரட்டாசி - கன்னி
௭ ஐப்பசி - துலாம்
௮ கார்த்திகை - விருச்சிகம்
௯ மார்கழி - தனு
௧0 தை - மகரம்
௧௧ மாசி - கும்பம்
௧௨ பங்குனி - மீனம்
மாதப் பிறப்பு
ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். அது மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.
பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரிய இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும். முறைப்படி அந்த நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் தேதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.
பெயர்க் காரணம்
சூரிய மாதங்களைப் பயன்படுத்தும் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எடுத்துக்காட்டாக கேரளாவில், இராசிகளின் பெயரையே மாதங்களுக்கும் வைத்து அழைக்கிறார்கள். தமிழ் மாதப் பெயர்கள் சந்திரமான முறையில் அமைந்த மாதப் பெயர்கள் போல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டவை. சூரியமான முறையின் அடிப்படையில் அமைந்த தமிழ் மாதங்களுக்குச் சந்திரமான முறையோடு இணைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இடப்பட்டதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றுக் காரணங்களினாலேயே இம்முறை புழக்கத்துக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை உணர்வதற்கு வசதியாக உள்ளது. பண்டைத்தமிழ் இலக்கியங்களில் "அடுத்த பூரணைக்குள் திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச் செல்லும்" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத் தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் பூரணை என்பது காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும் அறிய முடிகிறது.
சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.
செந்தமிழ் பெயர்கள்
மாதம் - செந்தமிழ்
௧ சித்திரை - மேழம்
௨ வைகாசி - விடை
௩ ஆனி - ஆடவை
௪ ஆடி - கடகம்
௫ ஆவணி - மடங்கல்
௬ புரட்டாசி - கன்னி
௭ ஐப்பசி - துலை
௮ கார்த்திகை - நளி
௯ மார்கழி - சிலை
௧0 தை - சுறவம்
௧௧ மாசி - கும்பம்
௧௨பங்குனி - மீனம்
வியாழன், 25 மார்ச், 2010
தமிழ் மாதங்கள்


0 comments:
கருத்துரையிடுக