சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

வெள்ளி, 29 அக்டோபர், 2010

வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள்

வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள்


ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக கருவேல மரங்களே இருந்து வருகின்றன. பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டம், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு:
கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்தும், கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. இதை அறியாமல் மனிதர்கள் தான், தற்போது கருவேல மரங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.

ஆமோதித்தது அறிவியல்:
கருவேல மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என நினைப்பவர்களுக்கு , அவற்றின் ஆபத்தை அறிவியலும் உணர்த்தியுள்ளது. கருவேல மரங்கள் ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு தன்மைக்கு மாறுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். அதன் பிறகும் கருவேல மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ வைப்பதற்கும் சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களும் ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இது குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.


கொடூரமும், கோரமும்:
பட்டா, புறம்போக்கு நிலங்களில் கம்பீரமாய் காட்சி தரும் கருவேல மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் செய்யும் வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம் அழைக்கிறோம். நமது நீரை உறிஞ்சி வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த கருவேல மரங்களை என்னவென்று அழைப்பது? நிலத்தடி நீரை முடிந்த வரை "சுவாகா' செய்வதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது பழியை போட்டு, பகைத்து வருகிறோம். கருவேல மரத்தின் இந்த கொடூரம், தமிழகத்தில் இங்கு தான் அதிகம் அரங்கேறி வருகிறது.

காற்றையும் விட்டுவைக்கவில்லை!
நிலத்தடி நீரை பால்படுத்தும் கருவேலமரங்களின் தாகம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் கருவேல மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக அளவில் உள்ளது. இதை அறியாமல் கருவேல மரங்களை நாமே வளர்த்து வருகிறோம் என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் கருவேல மரங்கள் காற்றையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சபூதங்களையும் ஏதாவது ஒரு வகையில் பதம் பார்த்து வரும் கருவேல மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் வரவேண்டும். நம்நாட்டின் மண்ணின் தன்மையை பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாகவே கருவேல மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் இந்த அளவு கருவேல மரங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.

"வளர்ப்போம்' கோஷத்தில் மாற்றம்!
உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள் எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் கருவேல மரங்களை மட்டும் அழியுங்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது. மரங்களுக்குரிய தன்மையை களங்கப்படுத்தும் இந்த கருவேல மரங்களால், புவியில் ஜீவராசிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகள் நிறைய உள்ளது. "மரம் நட விருப்பமில்லை,' என, நினைப்பவர்கள், நீங்கள் என்றால், கருவேல மரங்களை அழிப்பதற்காவது முன்வாருங்கள். இம்மாவட்டத்தில் மரம் நடுவது அவசியம் என்றாலும், அதே அளவுக்கு கருவேல மரங்களை அகற்ற வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் "மரங்களை வளர்ப்போம்' கோஷத்தில், "கருவேல மரங்களை அகற்றுவோம்,' என்ற, கோஷமும் இணைக்கப்பட வேண்டும்.


வெளிநாட்டில் "கெட் அவுட்':
உலக ஆட்சி, அரசியலில் முத்திரை பதித்து வரும் அமெரிக்காவில், கருவேல மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் முதலிடம் நம்ம ஊர் கருவேல மரங்களுக்கு என்பதை நாம் இந்த நேரத்தில் அறிய வேண்டும். அமெரிக்கர்களை போல வாழ நினைப்பது மட்டும் போதாது, அவர்களின் செயலையும் கடைபிடிக்கலாமே. இங்கோ ரோட்டின் இருபுறத்திலும் கருவேல மரங்கள், வீட்டின் வேலிகளாக கருவேல மரங்கள், என, முழு புழக்கத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் "கெட் அவுட்' சொல்லப்பட்ட, கருவேல மரங்களுக்கு இங்கு "வெல்கம்' கூறி, நமக்கு நாமே வேட்டு வைக்கிறோம்.


கேரள குளுமைக்கு காரணம் என்ன? ராமநாதபுரம் மாவட்டவாசிகள் கோடை சுற்றுலாவுக்கு கொடைக்கானல், கேரளாவுக்கு செல்வது வழக்கம். காரணம் அவையெல்லாம் இங்குள்ளவர்கள் பார்க்க முடியாத குளிர்ந்த பிரதேசங்கள். கேரளாவை எடுத்துக்கொண்டால், கருவேல மரங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். இதனால் அங்கு கருவேல மரங்களை காணமுடியாது. இங்குள்ள கருவேல மரங்களை அகற்றினால், நமது மாவட்டமும் கேரளவின் பொலிவுக்கு திரும்பும். கடலோர மாவட்டமாக ராமநாதபுரம் இருந்தும், போதிய மழைப்பொழிவு இல்லை என்றால், அதற்கு காரணம் கருவேல மரங்களின் தலையீடே ஆகும்.

காசு செய்யும் வேலை:
உதாசீணப்படுத்தப்பட்ட கருவேல மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும் கருவேல மரங்களை வளர்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு ஏற்ப சூழல் இங்கு தாமாகவே அமைந்துவிட்டதால், விவசாயிகள் பலரும் கருவேல மரங்களை விரும்புகின்றனர். எந்த செலவும் இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும் வியாபாரமாக கருவேல மரங்கள் மாறிவிட்டன. லாபத்தை கணக்கிடுபவர்களுக்கு அதன் பின்னணியில் உள்ள சோகத்தை அறிவதில்லை. கரி மூட்டம் போட்டு மேலும் புகையை கிளப்பி, காற்றை மாசுபடுத்துகின்றனர். இருந்தும் கெடுத்தது போதா தென்று, இறந்தும் காற்றை மாசுபடுத்தும் வேலையை கருவேல மரம் தெளிவாக செய்கிறது. பணத்தின் மீதுள்ள மோகத்தில் நம்மவர்களும், கருவேல மரங்களை நம்பி விவசாயத்தை கைவிட்டனர். இன்று பல விளைநிலங்களில் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் வளரச்செய்து, அறுவடைக்கு காத்திருக்கும் பக்குவத்திற்கு இங்குள்ளவர்கள் பழகிவிட்டனர். ­­­


வளம் காண அணுகுங்கள் வனத்துறையை...:
தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் இந்த மரக்கன்றுகளை, அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வளர்த்தால் நிச்சயம் இப்பகுதி பசுமையாக மாறும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வகையில் வளரும் தன்மையுடைய மரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டோர், தங்கள் பகுதியின் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தேவையான மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். பிற மாவட்டங்களில் எத்தனையோ பேர் இத்திட்டத்தை பின்பற்றி, மரங்களை வளர்த்து வருகின்றனர். நம்மாவட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. இனியாவது பிரயோஜனம் உள்ள மரங்களை தேர்வு செய்து நட, மாவட்டவாசிகளும், விவசாயிகளும் முன்வர வேண்டும்.


கருவேல மரங்கள் சார்ந்த தொழிலுக்கு தேவை தடை:
மாவட்டத்தில் கருவேல மரங்கள் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. இவை நாம் பெருமைப்பட வேண்டிய விசயம் அல்ல. விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என கருவேல மரங்களின் பாகங்களை பிரித்து மேய்ந்து விற்பனை செய்கின்றனர். தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த மாவட்டமே பழியாவதை தடுக்க வேண்டும். அதற்காக இது போன்ற கருவேல மரங்களை சார்ந்த தொழிலுக்கு மாவட்டத்தில் அனுமதி மறுக்க வேண்டும். இரும்பு கரம் கொண்ட தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும். உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் இது போன்ற தொழிலை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து வந்து, இங்கு முகாமிட்டு, மாவட்டத்தின் வறட்சிக்கு வழிகாட்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வெப்பமயமாவதால் குறிப்பிட்ட ஆண்டுகளில் உலகம் பெரிய இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ராமநாதபுரத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, முன்கூட்டியே இங்கு பாதிப்புகள் வரலாம், என்பதால், இங்கு இது போன்ற கெடுபிடிகள் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் குரல் இல்லை...:
வறட்சி, பின்தங்கி மாவட்டம் என தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், எதனால் இந்நிலையில் உள்ளது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில்லை. முழுக்க கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள இம்மாவட்டத்தை, சீரமைக்க எந்த குரலும் தரவில்லை. மாறாக கண்மாய்களில் விளைந்த கருவேல மரங்களை ஏலம் எடுப்பது, எடுத்து தருவதில் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டம் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் வளர்வதை தான் மக்கள் பிரதிநிதிகள் விரும்புகின்றனர். நம்மை நாமே காக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பொதுமக்களே இவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்.


விவசாயிகள் சொல்வதென்ன...

ஸ்ரீதர்(உத்தரகோசமங்கை):
கீழக்கரை, திருப்புல்லாணி உள்ள அதிகமான கருவேல மரங்களால், விவசாயிகள் கரிமூட்டம் போடும் தொழிலுக்கு மாறி விட்டனர். இவற்றின் வேர் பூமியின் கடைசி பகுதி வரை செல்வதால் நிலங்கள் கடுமையான வெப்பத்தை சந்திக்கிறது. நிலத்தடி நீரை காப்பாற்ற கருவேல மரங்களை ஒழிக்க வேண்டியது அவசியம்.


சேக்அப்துல்காதர்(எஸ்.பி.பட்டினம்):
திருவாடானை தாலுகாவின் கடற்கரை பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன. இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். கருவேல மரங்களை அப்புறப்படுத்திவிட்டு நல்ல மரங்களை நடுவு செய்தால், அதன் பலனை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கலாம்.

சுகுமாறன்(பரமக்குடி):
கருவேல மரங்களால் காற்று மாசுபடுகிறது. இதைதடுக்க கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயமாகி வருவதை தடுக்கவும், ராமநாதபுரத்தை வறட்சியிலிருந்து மீட்கவும் கருவேலமரங்கள் ஒழிப்பு கோஷம் ஓங்க வேண்டும்.


ராசு(கமுதி):
கருவேலமரங்களால் வெயில்காலத்தில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு ஏற்படுகிறது. கருவேல மரங்களை வெட்டி எத்தனையோ பேர் பிழைப்பு நடத்துகின்றனர். இருந்தாலும் , இதை அழித்தால் விவசாயம் கைகொடுக்கும் என்பதால் பாதிப்பு வராது.


திருநாவுக்கரசு (எஸ். எம். இலந்தைக்குளம், கடலாடி):
மித மழையில் விளையும் மிளகாய், குறுகியகால பயிரான தக்காளி, கத்தரிக்காய் போன்றவையும் கருவேல மரங்களால் பாதித்துவிட்டது. இவற்றை அகற்றவில்லை என்றால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் இடம் பெயருவதை தவிர வேறுவழியில்லை.


அழிக்க வேண்டியது அவசியம்...:
மாவட்டத்தில் மக்கள் தொகையை விட அதிகமாக காணப்படும் கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது. "அரசு நிலம், தனியார் பட்டா நிலத்தில் விளைந்துள்ளது,' என, உரிமை கொண்டாட, இவை ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வஸ்து இல்லை. பாரபட்சமில்லாமல் அழிக்கப்பட வேண்டிய விஷ ஜந்தாகும். வெட்டினால் தழைக்கும் தன்மை கொண்ட இவற்றை, வேருடன் அழிக்க வேண்டும். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு நிதி ஒதுக்கி, இயந்திரங்கள் மூலம் துரிதமாக பணி நடக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு இதில் இடம் கொடுக்க கூடாது. மாவட்டத்தில் தற்போதுள்ள கருவேல மரங்களில் 50 சதவீதத்தை ஒழித்தால் கூட, வறட்சியின் பிடியில் மாவட்ட மீள்வதை ஓரிரு ஆண்டில் நாம் உணரலாம். முழுமையாக ஒழித்து கட்டினால், கடலோர மாவட்டத்தின் பயனான, மழைபொழிவை நாம் ஆண்டுதோறும் அனுபவிக்கலாம். தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இந்த விசயத்தில் முழுஈடுபட்டுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், வறண்டு வரும் ராமநாதபுரத்தின் நிலையை மாற்ற முடியும்.















நன்றி : தினமலர்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கவிதை போட்டி

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு குழுமத்தின் கவிதை போட்டிக்காக தோழி ரம்பை அனுப்பிய கவிதை.... உங்கள் பார்வைக்காக....


தேடல்கள்

தேடித் தேடி தேயந்து போனது
எனது பாதங்கள் அல்ல
     என் மனசு
பார்த்துப் பார்த்துப் பூத்துப் போனது
எனது விழிகள் அல்ல
என் இதயம்
கேட்டுக் கேட்டுக் கிழிந்து போனது
எனது செவிகள் அல்ல
      என் உள்ளம்
பேசிப்பேசி வலித்துப் போனது
எனது வாய்கள் அல்ல
மறுபடியும் என் மனசே
பட்டுப் பட்டு கெட்டுப் போனது
எனது குடிகள் அல்ல
வெந்து போன என் இதயமே

                   -அற்புதாரம்பை








ரம்பை அவர்களுக்கு எங்கள் குழுமத்தின் பாராட்டுகள்,....

வெள்ளி, 15 அக்டோபர், 2010

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன









சனி, 2 அக்டோபர், 2010

காந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி? ஏன்?

காந்தி என்ற ஒரு தனி மனிதன் எப்படி இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டார்? இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர்? என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன.  கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை இலவச இணைப்பாக கிடைத்து.


















ஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி. இதன் காரணமாக காந்தி ஆங்கிலேயர்களால் ஒரு பெரும் சக்தி என்று வர்ணிக்கப்பட்டார். இந்தியாவின் அடையாளமாவதற்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது என்பதே பதிலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செய்து வந்த‌ பார்ப்பனர்கள், ஆங்கிலேயருக்கு காட்டியும் , கூட்டியும் கொடுத்ததால் மன்னர்களானவர்கள் (அவ்வாறு இல்லாதவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி), தொழிலதிபர்கள் இவர்களின் ஆதரவும் காந்திக்கு தேவையாக இருந்தது. காந்தி இவர்கள் அனைவரின் கருத்தியலுக்கும் ஒத்து போனார். இதனால் அன்றைய இந்தியாவின் அடையாளமாக காந்தி மெல்ல, மெல்ல உருமாற்றப்பட்டார்.
  என்ன காந்தி துரோகியா? ஆங்கிலேய அரசின் அடிமையா? எதை வைத்து நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் என நீங்கள் என்னை கேட்கலாம். இதற்கான சான்றுகள் பல எம்மிடம் உள்ளன. இங்கே சில முக்கியமானவற்றை கூறுகின்றேன். எந்த ஒரு ஏகாதிபத்தியத்திற்கும் “புரட்சி” “புரட்சியாளர்கள்” போன்ற சொற்களே ஒவ்வாமை(alergy) நோயை வரவழைத்துவிடும். புரட்சியையும், புரட்சியாளர்களையும் அழித்தொழிப்பதே ஏகாதிபத்தியங்களின் வேலை. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அந்த வேலையை இல்லாமல் பார்த்து கொண்டார் காந்தி. ஆம் இந்தியாவில் தோன்றிய புரட்சிகளையும், புரட்சியாளர்களையும் கருவறுப்பதையும் தனது முதல் வேலையாக பார்த்துக் கொண்டார் காந்தி. இந்த கருத்தியல் தான் காந்தியை ஆங்கிலேயர்கள் உயர வளரவிடுவதற்கு முக்கிய காரணமாகும். காந்தி இந்தியாவில் தோன்றிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளர்களை வேரறுப்பதில் ஆங்கிலேயர்களை விட மிக தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகத்சிங்கை தூக்கிலட காந்தி ஒப்புதல் அளித்தது மிக தெளிவாக காந்தி‍ இர்வின் ஒப்பந்த பதிவுகளிலும், அவரின் சீடரான சீதாரமையா எழுதிய இந்திய தேசிய காங்கிரசு என்ற நூலிலும் உள்ளது. பகத்சிங்கின் தியாகத்தீ இந்தியாவில் பற்றி எரியாமல் இருப்பதற்காக அவர் பார்த்த பணிகள் எல்லாம் கராச்சி காங்கிரசு மாநாட்டு பதிவுகளில் உள்ளது. இதை எல்லாம் ஒரு படி மேலே போய் அரசுக்கு ஆலோசனை கூறும் “அரச குரு” பதவியில் காந்தி ஈடுபட்டதும் உண்டு. அது வெளி வந்ததும் பகத்சிங்கின் மூலமாக தான். இதோ..
……..
அந்த கடிதத்தில், எமர்சன், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி…’ என்று தொடங்கும் அக்கடிதத்தில் அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக, சுபாஷ் சந்திர போஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அகூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், அதனை எப்படி ஒடுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார் காந்தி.
என் அருமை எமர்சன்,
சற்று நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள, அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னாலியன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகிறேன். எவ்வகையான காவல்துறை அணிவகுப்பும், தலையீடும் வேண்டாம் என்று நான் யோசனை கூறுகிறேன். கொந்தளிப்பான நிலை அங்கு இருக்கக்கூடும். அத்தகைய நிலை, கூட்டங்கள் போட்டு பேசுவதன் வாயிலாக வெளியேற அனுமதிப்பது நல்லதாக அமையும்.
த‌ங்களின்
நேர்மையுள்ள,
எம்.கே.காந்தி.
(பகத்சிங்கும் இந்திய விடுதலை என்ற நூலில் இது வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்)


















இதற்கு நேரடியாக தங்கள் அடிமையும், ஆலோசகருமான எம்.கே.காந்தி என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இது போன்ற‌ மக்கள் புரட்சிகளுக்கும், புரட்சியாளர்களையும் கருவறுக்கும் வேலையை காந்தி பல முறை செய்துள்ளார். சௌரி சௌரா மக்கள் போராட்டத்திற்கு பின்னர் இது போன்ற போராட்டங்கள் தவறு எனக்கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் (ஆனால் ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது என்பதை நினைவில் கொள்க). இதிலிருந்து காந்தி என்ற மக்கள் துரோகி ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் கருத்தியலிற்கும், ஆங்கிலேய அரசிற்கும் செய்த அடிமைப் பணிகள் செவ்வனே தெளிவாகின்றது. ஆங்கிலேய அரசை அண்டி பிழைத்ததால் அவர்களின் கருத்தியல் தான் அப்பொழுதிருந்த மன்னர்களிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்ததால் காந்தி இவர்களுக்காக தனியாக ஏதும் செய்ய தேவை இல்லாமல் போனது.  அடுத்து பார்ப்பனர்களின் கருத்தியலிற்கு காந்தி ஒத்து போனதை பார்ப்போம்.
  பார்ப்பனிய கருத்தியலான “இந்து கட்டமைப்பை” காந்தி தான் இறக்கும் காலத்திற்கு முன்பு வரை மிக செவ்வனே காப்பற்றி வந்தார் என்பதை அவரின் கருத்தியலான “இராம இராச்சியம் அமைப்பேன்” என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இதனால் தான் காந்தி “இந்து கட்டமைப்பினால்” அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கேவலப்படுத்தும் விதமாக “ஹரிஜன்” என்று பெயரிட்டழைத்தார். புற்றுநோயை குணப்படுத்த நல்ல சட்டை போட்டால் போதும் என்ற தனது பரிசோதனையை காந்தி இங்கே செய்து பார்த்தார். பல சமூக சீர்திருத்தம் ஏற்ப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட கிருத்தவ மதமே கல்லறையில் கூட பிரித்து வைத்து வன்மம் காட்டி வருகின்றது ( http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170 ) என்றால் அன்றைய காலகட்ட இந்தியாவை பார்ப்பனர்கள் தான் ஆண்டார்கள்(97% அரசு பணிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்களே) என்று நினைக்கும் போதும், அவர்களை இந்து மதத்தின் கொள்கைகள் என்று கூறி எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்திருக்கும் என்பதை நீங்கள் இப்பொழுது எண்ணிகூட பார்க்கமுடியாது. அப்படி பட்ட காலகட்டத்தில் தான் காந்தி கூறினார், நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் கூறிய இந்து மத கொள்கைகள் படியே வாழ வேண்டும் என. காந்தியின் துரோகம் இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. “இந்து மத கட்டமைப்பு” தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் ஆளாக வந்து முட்டு கொடுத்தவர் காந்தி. இதே போன்ற “இந்து மத கட்டமைப்பு” தகர்க்க கூடியதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கிய பூனா இரட்டை வாக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாக்டர்.அம்பேத்காரை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் காந்தியை பார்ப்பனர்கள் தங்கள் தலையின் மீது தூக்கிவைத்து கொள்ள உதவின. ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மத‌வெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. இதிலிருந்து  காந்தி பார்ப்பனீய கருத்தியலுக்கு ஒத்து போனார் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.













இதுவரை நாம் காந்தி கருத்தியல் ரீதியாக எப்படி ஆளும் அரசிற்கும், அப்போதைய ஆதிக்க வகுப்பிற்கும் துணைபோனார் என்பதை பார்த்தோம். இனி காந்தியுடைய சிறப்பு என்று கூறப்படும் தனிப்பட்ட குணநலன்களை பார்ப்போம்.
  காந்தி ஒரு அகிம்சாவாதி. அகிம்சாவாதி என்றால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாதவர் என பொருள். இதன் படி காந்தி அகிம்சாவதியா என பார்ப்போம். பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் படையில் சேர்ந்து மக்களை கொல்வதற்கு ஊர், ஊராக சென்று ஆள் திரட்டிய தரகருமான காந்தி எப்படி அகிம்சாவதியாவார்? என்பதே என் கேள்வி. இதிலிருந்து அவர் ஒரு அகிம்சாவதியும் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆறாவது அறிவான பகுத்தறிவை கொண்ட, படித்த முற்போக்கானவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய இளைய சமூகம் எப்படி காந்தியை அகிம்சாவதி எனக் கூறுகின்றார்கள் என எனக்கு கேள்வி எழும்புகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும், பொது புத்தியிலிருந்து விலகி இது போன்ற கட்டுகதைகளை உடைக்கவியலாத அவர்களின் கையாலாகாத தன்மையுமே காரணம். மேலும் எங்கே நம்மை சமூகம் தேசதுரோகியாக பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள்.  அகிம்சாவாதம் என்ற கருத்தியலில் தான் அவரின் எல்லா போராட்டங்களும் உருவானதால், அவை எல்லாம் இங்கே உடைப்பட்டு போய் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன.












அடுத்து நான் இங்கே வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு காந்தி பேராசை கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதே. ஆம் எங்கே நாம் இவ்வளவு நாள் சிரமப்பட்டு மக்களுக்கு குழிபறித்து உருவாக்கிய அந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் காந்திக்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் அவரே காங்கிரசில் சேர்த்த சுபாஷ் சந்திர போஸ் பின்னாளில் வளர்ந்து அவர் நிறுத்திய வேட்பாளரான பட்டாபி சீத்தாரமைய்யாவை தோற்கடித்த போது காந்தி தனது ஆதரவாளர்களையும் , மற்றவர்களையும் போஸ்ஸீன் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து சுபாஷ் சந்திர போஸே வெறுத்து காங்கிரசை விட்டுமட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேற தேவையான எல்லா அரசியலையும் செய்தார் காந்தி. இதே போல பகத்சிங்கின் புகழ் வழக்காடு மன்ற பிரச்சாரம் மூலமாக வேகமாக வளர்ந்து வந்த போது அதை கண்டு பயந்து அவரை கொல்வதற்கு ஆங்கிலேய அரசிற்கு எல்லா உதவிகளையும் அளித்தார்.
 இப்படிப்பட்ட பச்சோந்தி கொள்கைகளையுடைய, சர்வாதிகாரியும், மக்கள் துரோகியுமான காந்தி முதலில் ஒரு மனிதனா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.





















நட்புடன்......

ப.நற்றமிழன். 

http://natramizhan.wordpress.com/2010/10/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/