சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

சனி, 26 ஜூன், 2010

திருவரங்கம்

திருவரங்கம்

















காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் அல்லதுஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச் சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன்,தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.
இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

வரலாறு

சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.

மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி.
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

சங்கம் மறுவிய காலத்தில், பல ஆழ்வார்கள் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.

திருமங்கை ஆழ்வார் 73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
பெரியாழ்வார் 35
குலசேகராழ்வார் 31
திருமழிசையாழ்வார் 14
நம்மாழ்வார் 12
திருப்பாணாழ்வார் 10
ஆண்டாள் 10
பூதத்தாழ்வார் 4
பேயாழ்வார் 2
பொய்கையாழ்வார் 1

9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்க்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள்அறிவிக்கிறன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூறாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.
105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன்,ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தள்பதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்க்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உத்ஸவ மூர்த்திகள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உத்ஸவ மூர்த்திகள் மறுபடியும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டன. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.
திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் 807 , அதாவது கிபி 885 இல் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார் எனவும் பாடப் படுகிறது.
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே


இணைப்புக்கள்

ஸ்ரீரங்கம் கோவில் இணையத்தளம்
திருவரங்க பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள்

வெள்ளி, 25 ஜூன், 2010

உயர்நீதிமன்றத்தில் தமிழ்! என்ன சிக்கல்? யாருக்கு சிக்கல்?

உயர்நீதிமன்றத்தில் தமிழ்! 

என்ன சிக்கல்? யாருக்கு சிக்கல்?












தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது வழக்கு தொடுப்பது, வழக்கு மறுப்பது, விசாரணை நடைமுறைகள், தீர்ப்பு வழங்கல் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் நடைபெறலாம் – நடைபெறுகிறது. இதனால் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை.

ஆனால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்துவதில் பல சர்ச்சைகள் உள்ளன. இது குறித்து பெரும்பாலான நீதிபதிகளும், உயர் குலத்தோர் என்று குறிப்பிடப் படுபவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் பொருள் பொதிந்த மவுனம் சாதிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பட்டியலில் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

அரசியல் பார்வையற்ற சராசரி குடிமகனுக்கு மேற்கூறப்பட்ட வாக்கியம் அதிர்ச்சி அளிக்கலாம். தமிழாய்ந்த முதல் அமைச்சருக்கு, தமிழை நீதிமன்ற மொழியாக்குவதில் தடை என்ன இருக்கக்கூடும் என்ற கேள்வி எழலாம். உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் ஏற்காத ஒரு பிரச்சினைக்கு தமிழக அரசை குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்ற எண்ணமும் வரலாம். ஆனால் அது முழுமையான சிந்தனையாகாது.

எந்த ஒரு அரசிலும், அதை மக்கள் நேயமுள்ள ஒரு தலைவர் வழி நடத்தினாலும் அந்த ஆட்சியில் சிலர் பாதிக்கப்படுவது இயல்பானதே! அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குறைபாடுகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பது மக்களாட்சியின் வரம்புக்குள் அடங்கும் அம்சமே ஆகும்.

காமராஜர், அண்ணாதுரை போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானாலோ, மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக்கூறினாலோ அந்த பிரசினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தீராத பிரசினைகளுக்காக பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அதையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு அந்தப் பிரசினையை தீர்க்க முயலும் பக்குவம் அந்த தலைவர்களுக்கு இருந்தது.
















அண்மைக்கால ஆட்சிகளிலோ மக்களின் எந்த நியாயமான கோரிக்கைகளும் போராட்ட வடிவம் எடுக்கும் வரை கேட்காமலே புறக்கணிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே தவிர்கக இயலாமல் நடக்கும் போராட்டங்களையும் அரசின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக கருதாமல், தமது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வாக ஆட்சியாளர்கள் கருதுவதும், அதனால் கதிகலங்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவதும் வாடிக்கையாகி வருகிறது. மக்களுடைய போராட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமலிருக்கும் வகையில் ஊடக நிறுவனங்கள் சரிக்கட்டப் படுகின்றன. எதிர்க் கட்சிகள் வெளியிடும் கோரிக்கைகள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன. அரசின், ஆட்சியாளர்களின் புகழ்பாடும் கருத்துகளே ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கப் படுகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்படும் மக்களின் நியாயமான உரிமைகளை எடுத்துப் பேசும் களமாக நீதிமன்றம் அமைகிறது. மக்கள் பிரசினைக்காக வழக்கு தொடுக்கும்போது அந்த பிரசினை ஊடகங்கள் மூலமாக மக்களிடம் சென்றடைவதோடு, அந்த பிரசினை குறித்து பதில் அளிக்கும் நிர்பந்தமும் அரசுக்கு ஏற்படுகிறது. நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படுகின்றவா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, மக்களின் பாதிப்பு குறித்து விவாதிப்பதற்கு ஒரு களம் உருவாகிறது என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் கூடுதல் நற்பலனே.














மக்களின் நலனை முன்னிறுத்தும் பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மட்டுமே தொடுக்க முடியும். உச்ச நீதிமன்றம் என்பது வெகு தொலைவில் இருக்கும்போது அன்றாட பிரசினைகளுக்கு தீர்வு காண உயர்நீதிமன்றமே அருகில் உள்ளது. இவ்வாறு மக்களின் நியாயமான பிரசினைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களுக்கு மொழியும் ஒரு தடையாகிறது. ஆங்கிலம் நன்று கற்ற வழக்கறிஞர்கள் பொருளீட்டும் வழக்குகளில் முழுமையாக ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துவிடுவதால் அவர்களில் பலருக்கும் சமூகம் குறித்த உணர்வுகள் விரைவில் அற்றுப்போய்விடுகிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றுவோருக்கு அரசு அமைப்புகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் – அநீதிகளையும் நியாயப்படுத்த வேண்டிய “தொழில் தர்மம்” வந்து விடுகிறது.

இந்நிலையில் மக்களின் பிரசினைகளை முழுமையாகவும், அனுபவ பூர்வமாகவும் புரிந்து கொண்டு அந்தப் பிரசினைக்கு சட்டரீதியாக தீர்வு காண முனைபவர்கள் முழுமையான ஆங்கிலப் புலமை இல்லாமல் (ஆங்கிலப் புலமை வேறு: சட்ட அறிவு, சமூக உணர்வு வேறு!) சாமானியனின் வாழ்வை வாழும் சாதாரண வழக்கறிஞர்களே. இந்த வழக்கறிஞர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் மனு அளித்தல், தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் கோருதல் போன்றவையே அரசை பல்வேறு அம்சங்களிலும் முட்டுச்சந்தில் நிறுத்தி விடுகின்றன.

தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியே அரசையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கலங்கடிக்கும் இந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவதில் அவர்களுக்கு தடையாக இருப்பது மொழி மட்டுமே. இந்தத் தடையை தவிர்ப்பதற்காகவே, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக மக்கள் சார்பு வழக்கறிஞர்களாலும், சமூக பொறுப்புள்ளவர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.
















ஆனால் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிப்பது என்பது, தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதைப் போன்ற சாதாரணமான அம்சம் அல்ல என்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரித்தால் கிடைக்கும் வாழ்த்துகளுக்கு எந்த பொருள் மதிப்பும் இல்லை என்பதும், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கச் செய்வதால் ஏற்படும் விளைவுகளால் பொருள் ரீதியான பெரும் இழப்பு ஏற்படும் என்பதும் பொருள்முதவாதிகளான தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிக நன்றாகவேத் தெரியும். எனவேதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு இணையான இந்த செயலை செய்வதற்கு அவர்களுக்கு துணிவில்லை.

தமிழை நீதிமன்ற மொழியாக்குவதற்கு தேவையான சட்ட நூல்கள் தமிழில் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் நீதிபதிகளாலும், பெரும்பான்மை வழக்கறிஞர்களாலும் எழுப்பப்படுகிறது. அண்டை நாடான இலங்கையில் மருத்துவம் தமிழ் வழி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே பொறியியலை தமிழ்வழி கற்பிப்பதற்கான பாடநூல்கள் வெளியாகிவிட்டன. தமிழில் வாதாடும் வழக்கறிஞர்கள் பெருகும் நிலையில் சட்டநூல்களும் தேவையான அளவுக்கு வெளியாகும். தமிழை வளர்ப்பதற்காக இல்லை என்றாலும், வணிக நோக்கத்திலாவது தமிழில் தரம் வாய்ந்த சட்ட நூல்கள் வெளியாகும்.

தமிழில் வாதாடும் வாய்ப்பு கிடைத்தால் பொதுமக்களே நேரடியாக வழக்கை நடத்த முன் வந்து விடுவார்கள்: வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற கருத்தும் சில வழக்கறிஞர்களிடம் உள்ளது. ஒரு வழக்கை நடத்த வெறும் சட்ட நூல்கள் (Bare Act Books) மட்டுமே போதாது என்பது வழக்கு நடத்தி அனுபவம் பெற்ற அனைத்து மக்களுக்கும் தெரியும். ஒரு வழக்கை வெற்றிகரமாக நடத்த அந்த விவகாரம் குறித்து நீதிமன்ற முன்மாதிரி தீர்ப்புகளும், வேறு பல அம்சங்களும் தேவை என்ற உண்மை சாதாரண மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் வழக்கு நடத்தினால், வழக்கு நடத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் தெளிவு பெற வழி பிறக்கும். இது வழக்காடும் மக்களுக்கு நல்லதே. இதனால் நேர்மையான வழக்கறிஞர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படபோவதில்லை.

எனவே நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிப்பதில் சாதாரண மக்களுக்கு நன்மையே ஏற்படும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஆளும் வர்க்கமாகவே இருக்கும். ஆட்சியில் இருப்போர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரே தமிழ் நீதிமன்ற மொழியாவதில் முதன்மையாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

மக்களின் உழைப்பை சுரண்டி திரட்டப்பட்ட பொது நிதியை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தாமல் கவர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வாக்குகளை அள்ள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாவதால் சிக்கல்கள் ஏற்படலாம். அரசின் பொறுப்பற்ற போக்கை, தொலைநோக்கற்ற குறுகிய அரசியல் பார்வைகளை, மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் சீர்கேட்டை பொதுநல வழக்கு என்ற பெயரில் பொதுமக்கள் கேள்வி கேட்டால், அக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஆட்சியாளர்களுக்கு வரும். தங்களை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, போற்றுதலுக்கு மட்டுமே உரியவர்களாக கருதிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்படுவதை எப்படி அனுமதிப்பார்கள்? எனவே இந்த அரசியல்வாதிகள், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பகல் கனவே!

இதையடுத்து உயர்குலம் சார்ந்தவர்களாக குறிப்பிடப்படும் வழக்கறிஞர்களும், ஆங்கிலம் அறிந்த காரணத்தாலேயே தம்மையும் உயர் குலத்தவராக கருதிக் கொள்ளும் வழக்கறிஞர்களும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பதால் பாதிக்கப்படுபவர்கள். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டால் அது மக்களுக்கு நன்மையாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகை வழக்கறிஞர்களின் ஆதிக்கத்தில் நீதித்துறை இருப்பதாலேயே ஏராளமான வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.

சட்டம், சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை இல்லாததால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களை நாடும் நிலை உள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களின் பணிச்சுமை அதிகரித்து பாதிக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை உடனே பெற்றுத்தராமல், அம்மக்களை அந்த அநீதிக்குள் பல காலம் வாழுமாறு நிர்ப்பந்தப் படுத்துகிறது.

இந்த அவல நிலையை மாற்றவதில், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கும் செயல் முக்கிய பங்கு வகிக்கும். தமிழ் நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து வழக்கறிஞர்களும் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். எனவே மக்கள் நலன் நாடும் வழக்குகளில் தேவையின்றி காலநீட்டிப்பு (வாய்தா) பெற வேண்டிய அவசியம் இருக்காது. தாமதித்து வழங்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று வசனம் பேசிக்கொண்டே அந்த அநீதியை தொடர்ந்து இழைத்து வரும் நீதித்துறை திருந்தும் காலம் வரும்.

சுருக்கமாக கூறினால் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மொழி வளர்ச்சிக்கான செயல்பாடு மட்டுமே அல்ல. இது கடைக்கோடி மனிதனுக்கும் சமூக நீதி உள்ளிட்ட மனித உரிமைகளை கொண்டு சேர்க்கும் அருமையான வாய்ப்பாகும். அரசின் கடப்பாடுகளை வலியுறுத்தி உரிமைகளை பெறவும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டமைக்கவும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமான செயல்பாடாகும்.

இந்தியாவின் குடியரசு உண்மையிலேயே மக்களுக்காக, மக்களால் கட்டமைக்கப்பட்ட குடியரசு என்பது உண்மையானால் தமிழ் மட்டுமல்ல – அனைத்து மாநில மக்களும் அந்தந்த மாநில மொழிகளை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும்.

நன்றி: மக்கள் சட்டம் வலை தளம்.  

செவ்வாய், 15 ஜூன், 2010

புரட்சி கவிஞர் பாரதிதாசனின் "இருண்ட வீடு"













1. தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.
கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.

*....*....*

அப்போது மணியும் ஆறரை ஆனதால்
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது-உரலின் அண்டையில்
வைத்துப் போனான். மங்கையின் கணவனோ,
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந் திருந்தான்.

*

2. குழந்தையின் அழுகை, பையனின் பொய்; தந்தையின் போக்கு.
தாயோ துயில்வதில் தனிமை பொறாமல்
நோயுடன் குழந்தை நூறு தடவை
அம்மா என்றும் அப்பா என்றும்
கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!

* * *

பெரிய பையன் பிட்டையும் வடையையும்
கருதி, முதலில் கையால் சாம்பலைத்
தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
அருகில் இருந்தபால் செம்பை, விரைவில்
தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்;
பாக்கி இருப்பது பால் என்றறிந்து
கடிது சென்றே "இடையன் இப்படிச்
செம்பின் பாலைச் சிந்தினான்" என்று,
நம்பும் படியே நவின்றான் தந்தைபால்!
தந்தையார் "நாளைக் கந்த இடையன்
வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந்" தருளினார்.

*

3. பையன் காலைக்கடன் முடிக்காமல் உணவுண்ணத் தொடங்கினான்;
இரண்டு பற்களின் மறைவு.
பிட்டுக் காரி தட்டினாள் கதவையே
திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்
ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது
வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்
வடையின் சுவையோ விடேன் விடேன் என்றது
கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
வில்லம்பு போல மிகவிரை வாக
நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
படபட வென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!

*

4. தலைவி எழுந்தாள்; சாணமிட்டாள்; கோலமிட்டாள்;
அவளைக் கண்ட பகலவன் நடுங்கினான்.
நாயின் அலறல் நற்பசுக் கதறல்
பானையின் படபடா பையனின் ஐயோ -
இத்தனை முழக்கில் ஏந்திழை புரண்டு
பொத்தல் மரத்தின் புழுப்போல் நெளிந்தே
எழுந்தாள். அவளோ, பிழிந்து போட்ட
கருப்பஞ் சக்கையின் கற்றைபோல் இருந்தாள்.
இதுதான் பாதை எனும் உணர்வின்றி
மெதுவாய் அறையினின்று வெளியில் வந்தாள்.
பாதி திறந்த கோதையின் விழியோ
பலகறை நடுவில் பதிந்த கோடுபோல்
தோன்றிற்று! மங்கை தூக்கம் நீங்காது,
ஊன்றும் அடிகள் ஓய்ந்து தள்ளாடினாள்.
உடைந்த பெட்டி மேல் கிடந்த பிட்டைத்
தொடர்ந்து நாய் தின்பதும் தோன்றவில்லை.
நடந்து சென்றவள் நற்பசு வுக்கெதிர்
கிடந்த சாணியைக் கிளறி எடுத்து
மீந்தபாற் செம்பில் விழுது கரைத்துச்
சாய்ந்து விடாமல் தாழைத் திறந்து
தெருவின் குறட்டில் தெளித்தாள்! அவள்குழல்
முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல் போல்
மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது!
வாலிழந்து போன மந்தி முகத்தாள்
கோல மிடவும் குனிந்தாள்; தாமரை
போல எழுதப் போட்ட திட்டம்
சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம்
அவிழ்ந்து சிதறுமே, அப்படி முடிந்தது!
பொன்நிறக் கதிரொடு போந்த பகலவன்
இந்நில மக்கள்பால் தன்விழி செலுத்தினான்!
கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள்.
காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின!

*

5. தலைவி, தலைவன், பையனுக்கு மருத்துவம், சாணி ஒத்தடம்.
குறட்டி னின்று கோதை, உட்சென்று
கணவனின் எதிர்வந்து கையோய்ந்து குந்தினாள்.

* * *

காலையில் புதுப்பேச்சுக் காண லாயினார்.
தன்னரு மனைவியைப் பொன்னிகர் கணவன்
"என்ன மணியடி?" என்று கேட்டான்.
"சண்டிமணிப் பொறிக்குச் சாவி கொடுக்க
அண்டை வீட்டானை அன்றே அழைத்தேன்;
வரவே இல்லை மாமா" என்றாள்.
அந்த நேரம் அண்டை வீட்டுக்
கந்தன், குடையும் காலிற் செருப்புமாய்
வீட்டி னின்று வெளியிற் செல்வதைப்
பார்த்த கணவன், "பாரடி அவனை,
அதற்குள் வேலை அனைத்தும் முடித்துக்
கடைக்குச் செல்லும் கருத்தை" என்றான்.
"விடியா மூஞ்சி விடியு முன்பே
போனால் நீயும் போக வேண்டுமோ?"
என்று கூறி இளிக்க லானாள்.

* * *

பெரிய பையன் அருகில் வந்தான்
வடையும் கையும் வாயும் புண்ணுமாய்
நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே
'என்ன என்ன' என்றுகேட் டாள்தாய்.
புன்னை அரும்புபோல் புதிதாய் முளைத்த
இரண்டு பற்கள் இல்லைஎன் றுரைத்தான்.
வீங்கிய உதட்டுநோய் தாங்கிலேன் என்றான்.
உருண்டைச் சாணியை ஒருமுறை பூசினால்
மறுநொடி ஆறுமென்று மங்கை மருத்துவ
மறைநூல் வகுத்த வண்ணம் கூறினாள்.
பிறகா கட்டும் பிட்டைத் தின்பாய்
வேலைக் காரி விடிந்தபின் வருவாள்
பாலைக் காய்ச்சிப் பருகலாம் என்றாள்.
எட்டரை அடிக்கையில் இப்படிச் சொன்னாள்.

*

6. பிட்டை நாய் தின்றது, மீண்டும் வாங்கிய பிட்டுக்குத் தலைவர் புறப்படுகிறார். 
புதிய பிட்டை உண்ணப் பையன் உதடு இடந்தரவில்லை.
அழுமூஞ்சி பிட்டை அணுகினான். நாயும்
நழுவிற்றுப் பிட்டை நன்று தின்று.
தொட்டுச் சுவைக்கப் பிட்டில் லாமையால்
பெரிய பையன் சிறிய நரிபோல்
ஊழ் ஊழ் என்றே ஊளையிட் டிருந்தான்.

வீடு பெருக்கும் வேம்பு வந்தாள்!
சமையல் செய்யும் சங்கிலி வந்தாள்!
கடைக்கென் றமைந்த கணக்கன் வந்தான்!
கூடத்து நடுவில் ஏடு விரித்தே
மறுபடி வாங்கிய வடையையும் பிட்டையும்
சங்கிலி படைத்தாள் தலைவருக் காகவே!
பல்லைச் சுரண்டுவோர் பார்த்தார் அதனை,
மெல்ல எழுந்தார், மெல்ல நடந்தார்.
காலைக் கடனைக் கழிக்கக் கருதினார்.

பிட்டையும் வடையையும் பெட்டியில் குந்திக்
கிட்ட இழுத்தான் கிழிந்தவாய்ப் பெரியவன்.
அவனுடல் கொஞ்சம் அசைந்தது. வாய்எயிறு
கவலை மாட்டின் கழுத்துப் போல
வீங்கி இருந்ததால் வெடுக்கென வலித்தது!
தாங்காது கையால் தடவிப் பார்த்தான்!
நோயும் பெரியவன் நோக்க வில்லை!
வாயில் நுழைய வடைக்கு வழியில்லை!

*

7. பிள்ளையின் நோய்க்குப் பிட்டுத் திணிக்கப்படுகிறது.
மற்றவர்க்குப் பிட்டு வேண்டாம் என்று முடிந்தது. பிள்ளைக்கு வாயில்லை.
வீட்டின் தலைவி நீட்டிய காலும்
ஆட்டின் கத்தல்போல் அருமைப் பாட்டுமாய்க்
குழந்தையை வைத்துக் குந்தி யிருந்தாள்.
இழந்த உயிரில் இம்மி யளவு
பிள்ளையின் உடலொடு பிணைந்தி ருந்ததால்,
வள்ளிக் கொடியும் வதங்கிய தைப்போல்
தாய்மேற் பிள்ளை சாய்ந்து கிடந்தது.

தாயோ சங்கிலி தன்னை அழைத்து
"வாங்கி வந்த வடையையும் பிட்டையும்
கொண்டுவா பசியடி குழந்தைக்" கென்றாள்.
தட்டில் வடையும் பிட்டும் கொண்டு
சட்டென வைத்தாள் சங்கிலி என்பவள்.

கூடத்து நடுவில் ஏடு விரித்து
வைத்த பிட்டையும் வடையையும், வந்து
மொய்த்த ஈயடு முதல்வர் தின்றார்!
மறுபடி ஒருபிடி வாயில் வைக்குமுன்
சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார்.

அதனால் அதை அவர் அருந்துதல் நீங்கி,
கையினால் "வேண்டாம் வடை" என்று காட்டினார்.

பெரிய பையன் பிசைந்தான் பிட்டை!
ஒருதுளி கூட உண்ணமாட் டாமல்
கொரகொர கொழகொழ கொணகொண என்றான்.
இதன் மொழிபெயர்ப் பென்ன என்றால்
"எயிறு வீங்கி இடத்தை மறித்தது
தின்பதற் கென்ன செய்வேன்?" என்பதாம்.
பையனால் இப்படிப் பகர முடிந்தது.
பிட்டை வாயில் இட்டுத் திணிக்கும்
தாயை நோக்கிஅத் தடுக்குக் குழந்தை
"தாயே எனக்கிது சாகும் நேரம்"என்று
வாயால் சொல்லும் வல்லமை இல்லை.
அறிவெனும் வெளிச்சம் அங்கே யில்லை.
மடமை மட்டும் மகிழ்ந்து கிடந்தது.

*

8. பிள்ளை நிலைக்குக் காரணம் தோன்றிவிட்டது தலைவிக்கு!
தந்தியும் ஆணியும் தளர்ந்த யாழ்போல்
கூடத்து நடுவில் வாடிய சருகுபோல்
பெரியவன் பாயில் சுருண்டு கிடந்தான்.
என்பு முறிந்த வன்புலி யுடம்பைக்
கன்மேல் கிடத்திய காட்சிபோல
ஓய்வுடன் தலைவர் ஒருபக் கத்தில்
சாய்வுநாற் காலியில் சாய்ந்து கிடந்தார்.

* * *

வயிற்றின் உப்பலால் வாயிலாக் குழந்தை
உயிரை இழக்க ஒப்பாது கிடந்தது;

* * *

நடைவீட் டினிலே கடையின் கணக்கன்
நெடுந் தூக்கத்தில் படிந்து கிடந்தான்.
வேலைசெய் வோர்கள் மூலையில் குந்தி
மாலை நேரத்தின் வரவுபார்த் திருந்தனர்.

* * *

இல்லத் தலைவி எண்ண லானாள்:
குழந்தை யுடம்பில் கோளா றென்ன?
வளர்க்கும் முறையில் மாற்ற மில்லையே!
களிம்புறு பித்தளை கைப்படக் கைப்பட
விளங்குறும் அதுபோல், வேளை தோறும்
கனிநிகர் உடம்பில் கண்ணை வைத்துப்
பனிபிணி யின்றிப் பார்க்கின் றேனே!
எனப்பல வாறு நினைக்கும் போது
நெட்டை யன்தலை குட்டை இறைப்பினில்
பட்டதைப் போல்அப் பாவையின் நெஞ்சில்
பட்டதோர் எண்ணம்! பார்வை திருப்பினாள்:
"மந்திரக் காரன் வரட்டும்" என்றாள்.
அந்தச் சங்கிலி, "அவர் ஏன்" என்றாள்.
"இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
நொந்தது குழந்தை நோயால்" என்றாள்.
"வாலன் என்னும் மந்திரக் காரனை
அழைக்கின் றேன்"என் றறைந்தாள் சங்கிலி!
"சரிபோ!" என்று தலைவி சொன்னாள்!
நாழிகை போக்காது நடந்தாள் சங்கிலி!
"ஏழரை ஒன்ப திராகு காலம்
இப்போது வேண்டாம்" - என்றான் தலைவன்.
வீட்டின் அரசியும் வேண்டாம் என்றாள்.
நடந்த சங்கிலி நன்றெனத் திரும்பினாள்.
வேலைக் காரியும் வீட்டின் தலைவியும்
நாலைந்து கடவுளின் நற்பெயர் கூறிக்
காப்பீர் என்று காப்புங் கட்டி
வேப்பிலை ஒடிக்கும் வேலையில் நுழைந்தார்.

*

9. வரவேண்டிய பணம் நல்ல வேளையில்தான் வந்தது.
வீட்டு முன்கட்டில் வீட்டுக் காரனும்
"காட்டுமுத்" தெனும் கணக்கனும் ஏதோ
ஓசை காட்டிப் பேசி யிருந்தனர்.
அந்த நேரம் அந்த இடத்தில்
பாக்கியும் வட்டியும் பட்டுச் செட்டி
தூக்கி வந்து தொகையாய் எண்ணினான்.
வீட்டுக் காரனும் வீட்டுக் கணக்கனும்
சீட்டை எடுத்துச் செல்லு வைத்தார்.
பட்டுச் செட்டி பகரு கின்றான்:
"இராகு காலம் எட்டிப் போனபின்
தரவேண் டியதைத் தந்தேன்; ஆயினும்
தந்த பணத்தைச் சரியாய் எண்ணிச்
சொந்தப் பெட்டியில் சுருக்காய் வைப்பீர்"
என்று கூறி எழுந்து போனான்!

*

10. வீட்டின் தூய்மை, எலிக்கூத்து, பூனை மகிழ்ச்சி, எறிபடும் குப்பை.
இனிதாய்ப் பகல்மணி பனிரண் டானது
பழங்கல அறைக்குள் பதுங்கி யிருந்த
கிழஎலி கள்தாம் கிளைஞ ரோடு
கூடத் திற்சிறு குண்டான் மேலும்
மாடிப் படியில் மட்குடந் தனிலும்,
ஆடல் பாடல் அரங்கு செய்தன.

தயிரின் மொந்தையில் தலை புகாததால்
நறுக்கென்று சாய்த்து நக்கிற்றுப் பூனை!

வடித்த சோற்றை வட்டிலில் கண்டு
தடித்தடிக் காக்கைகள் சலிக்கத் தின்றன!

* * *

வீட்டினுள் காற்று வீசுந் தோறும்
மோட்டு வளையில் மொய்த்த ஒட்டடை
பூமழை யாகப் பொழியும் தரையில்!
ஊமைக் குப்பைகள் உம்மென்று மேலெழும்!

*

11. தலைவர் சாப்பிட முடியவில்லை;
இலந்தையூர்க்குப் புறப்பட வேண்டியதாயிற்று.
சங்கிலி தலைவரைச் சாப்பிட அழைத்தாள்;
அங்கே பசியால் அழியும் தலைவரோ
மெதுவாய் எழுந்தார்; அதே நேரத்தில்
எப்போ தும்போல் இரண்டு பல்லிகள்
பளபள வென்று பாடவே, தலைவர்
மீண்டும்நாற் காலியில் விசையாய்ச் சாய்ந்தார்.
அந்த நேரம் அங்குநின் றிருந்த
கணக்கன் தலைவரைக் கனிவுடன் அழைத்தே
"இன்று நீங்கள் இலந்தை யூர்க்குச்
சென்று வஞ்சகன் சிற்றம் பலத்தைக்
கண்டு பணத்தைக் கையடு வாங்கிக்
கொண்டு வருவதாய்க் கூறி னீர்களே!
ஐதராப் பாக்கம் அவன் ஓடிவிட்டால்
பைதரா வழக்கும் பயன்படாதே
பத்துப் பைகள் பறிபோக லாமோ?"
என்று பலவும் எடுத்துச் சொன்னான்!
"நன்று நன்று சென்று நீஒரு
காரைப் பேசிக் கடிதில் கொண்டுவா.
அச்சாரப் பணம் ஐந்துரூ பாய்கொடு.
கடன் பட்டவனைக் கையடு பிடிக்க
அரச காவலர் அங்கே இருப்பரேல்
ஐந்து ரூபாய் அவரிடம் கொடுத்து
வேண்டிய ஒழுங்குடன் விரைவில் அழைத்துவா"
என்றான் தலைவன்! ஏகினான் கணக்கன்.
*

12. தலைவரின் மைத்துனர் வருகிறார்; வரவேண்டாம் என்று வரவேற்றார்.
ளள் ளள் என்று வெள்ளை நாய், வீட்டின்
வாயிலில், யாரையோ வரவேற் கின்றதை
வீட்டுக் காரர் கேட்டார் காதில்,
நீட்டினார் தலையை வீட்டின் வெளியில்
மைத்துனர் ஊரினின்று வருவதாய் அறிந்தார்.
வாரும் வாரும் வாரும் என்றார்.
மைத்துனர், வந்தேன் வந்தேன் என்று
வாயிற் படிமேல் வைத்தார் காலை.
இடறிற்றுக் கால்! இரும்இரும் மச்சான்
வராதீர் மச்சான் வராதீர் என்றார்.
இல்லை இல்லை என்றார் மைத்துனர்.

* * *

தூய குறிதான் தோன்றும் வரைக்கும்
வாயிலில் காலை வைக்கலா காதென
மைத்துனர், எதிரில் மாட்டுக் கொட்டிலில்
மொய்க்கும் கொசுக்களால் மூடுண் டிருந்தார்.
காரும் சாவடிக் காவல ரோடு
நேரில் வீட்டெதிர் நின்றது வந்து.
விரைவாய் உண்டார்; விரைவாய் ஏறினார்;
விரைவாய்க் காரும் தெருவை அகன்றது.
கணக்கனும் அந்தக் காரில் சென்றான்.

*

13. தலைவியும் அவளின் அண்ணனும் பேசுகிறார்கள்;
குழந்தைக்குப் பண்டம் வாங்கி வந்தார் மாமா.
மைத்துனர் வீடு வந்து நுழைந்தார்.
ஒத்த அன்பின் உடன்பிறந் தாளைத்
"தங்கையே என்ன அங்கே செய்கின்றாய்?
உடம்புக் கென்ன? குறைபா டில்லையே?
குழந்தைக் கென்ன? ஒன்று மில்லையே?
பெரியவன் நலத்தில் பிழைபா டில்லையே?
குடித்தனம் எவ்வாறு? தடித்தனம் இல்லையே?"
என்று கேட்டார். எதிரில் நின்றவள்
"இருக்கின் றேன்நான்" என்று கூறினாள்.
சாகா திருப்பது தனக்கே வியப்போ?

* * *

அங்குப் பாயினில் அயர்ந்து கிடந்த
வாயிலாக் குழந்தையை மைத்துனர் கண்டார்.
இயம்ப முடியா இரக்கம் அடைந்தார்.
அவ்விரக் கத்தின் அறிகுறி யாகத்
தூங்கும் பிள்ளையைத் துயருற எழுப்பி
வாங்கி வந்த மாம்பழம் அனைத்தையும்
ஆங்கே குழந்தை அண்டையில் பரப்பினார்.
பூந்தி கட்டிய பொட்டணம் அவிழ்த்துக்
கொஞ்சம் அள்ளிக் குழந்தை முகத்தெதிர்
வஞ்சம் இன்றி வைத்துக் "குழந்தையே
பாங்கொடு தின்னப் பழமும் பூந்தியும்
வாங்கி வந்தேன் மருந்துபோல்" என்றார்;
ஓட்டை நீக்கி உள்ளீடு தன்னைக்
காட்டி விளாம்பழம் கருத்தாய்த் தின்என்று
அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்!
குழந்தை கிடந்த கூட மெல்லாம்
உழுந்து கிடந்த ஒருகளம் போலவும்
வேம்பின் பழம்பூ விரிதரை போலவும்
ஈயின் காடும் எறும்பின் காடும்
ஆயிற்று! மைத்துனர் அப்புறம் சென்றார்.

*

14. பெரிய பையனுக்கு விளையாட்டுத் துப்பாக்கி! அனைவர்க்கும் மகிழ்ச்சி!
அங்கே, பெரியவன் அடுக்கிய இரண்டு
முட்டைபோல் உதடுகள் முன்னே தோன்ற
மல்லாந்து மார்பை மறுபுறம் திருப்பாது
சொல்லும் இன்றித் துடிக்கும் நெஞ்சோடு
மாம்பழம் விளாம்பழம் வந்த வழியில்
காதைச் செலுத்திக் கண்ணைச் சாய்த்து
மாமனை எதிர்பார்த் தூமைபோல் அழுதான்.
மாமனோ சென்னையில் வாங்கி வந்த
கைத்துப் பாக்கியைக் கையில் கொடுத்தான்.
பெரியவன் உதடுகள் சிரித்தாக வேண்டும்!
வெள்ளைப் பற்கள் வெளித் தோன்றாமல்
பிணம் சிரிப்பதுபோல் பெரிதும் சிரித்தான்.
தங்க மாமனார் தாமும் சிரித்தார்.
உரியவள் இதனை உணர்ந்து சிரித்தாள்.
கைத்துப் பாக்கி மெய்த்துப் பாக்கிபோல்
வித்தென்று தக்கை விலகி வெடிப்பதை
மாமனார் காட்டினார். மங்கையும் பையனும்
வியப்படைங் தார்கள்.வீட்டுக் காரியோ
"அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல்
வைத்து விடுங்கள் வைத்து விடுங்கள்
அவனிடம் கொடுக்க லாகா" தென்றாள்.
அவ்வா றதனை அங்கே வைத்தார்.
*

15. பையனின் சாதகம், கைப்பிள்ளைக்குச் சாவே கிடையாது.
"என்னருந் தங்கையே இந்தப் பெரியவன்
நன்றாகப் படிக் கின்றானா? சொல்"
என்றான். தங்கை இயம்பு கின்றாள்.
"சாதகம் பார்த்தோம்; சரியாய் அவனுக்குப்
பத்தொன்ப தாண்டு படிப்பு வராதாம்.
இருபதில் உலகையே என்னதென் பானாம்"
என்றுதன் அண்ண னிடத்திற் கூறினாள்.
"கையோ டிந்தக் கைக் குழந்தையின்
குறிப்பையும் பார்த்தால் குற்ற மென்ன?"
என்று கேட்டான் பின்னும் அண்ணன்.
"காட்டினேன் குழந்தையைக் கல்லில் தூக்கிப்
போட்ட போதிலும் போகாதாம் உயிர்;
தொண்ணூறு வயதென்று சோசியன் சொன்னான்.
மந்தத் தாலே வந்த நலிஇது!
இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
நலிஇவ் வாறு வலிவு பட்டது.
வளரும் பிள்ளைக்கு வயிற்றுக் கோளாறு
வருவதும் போவதும் வழக்கந் தானே!
நாளைக்கே இது நன்றாய்ப் போய்விடும்
ஏழு மலையான் இரக்கம் வைப்பான்.
காப்பாய் என்று காப்பும் கட்டினேன்."
என்று தங்கை இயம்பினாள். அவனோ
"சமையல் ஆனதா தங்கையே" என்றான்.

*

16. அண்ணன் தன் பசியைக் கூறினான்; தங்கை 
அவன் ஏறி வந்த வண்டியை மெச்சுகிறாள்.
"ஆமாம் இந்த அலைச்சலில் உங்களைச்
சாப்பிடும் படியும் சாற்ற வில்லை"
என்றாள். "வெந்நீர் இருக்குமா" என்றான்.
"ஆமாம் ஆமாம் அடுப்பில் வெந்நீர்
கொதிக்க வைப்பேன் குளிப்பீர்" என்றாள்.
"வெற்றிலை கொஞ்சம் வேண்டும்" என்றான்.
"ஆமாம் ஆமாம் அதையும் மறந்தேன்"
என்று கூறி ஈந்தாள் வெற்றிலை.
வெற்றிலை போட்டான். வெறித்துப் பார்த்தான்.
சாப்பிடச் சொல்லிக் கூப்பிட வில்லை.
பசியால் அண்ணன் பதைபதைக் கின்றான்;
துடிப்போடு தங்கைபால் சொல்ல லானான்;
"விடிய நாலுக்கு வீட்டை விட்டுக்
கிளம்பி னேனா? கிளிய னூரில்
சிற்றுண வுக்குச் சுற்றிப் பார்த்தேன்.
அகப்பட வில்லை; அதற்குள் வண்டியும்
புறப்பட் டதனால் பொசுக்கும் பசியுடன்
ஏறினேன்; இங்கே இழிந்தேன்" என்றான்.
இந்தக் கதையை இயம்பித் தனது
பொறுக்கொணாப் பசியைப் புகன்றான். அவளோ
எங்கள் அண்ணன் ஏறி வந்த
வண்டியே வண்டி வண்டியே வண்டி
என்று வண்டியின் இயல்பைப் பற்றி
எண்ணி மகிழ்ந்தாள்! மண்ணாங் கட்டி!

*

17. மாலை ஏழு மணிக்குக் காப்பி முடிகிறது.
அண்ணன் உடனே அருகி லிருந்த
உணவு விடுதியில் உண்டு வந்தான்.
குறட்டைத் தூக்கம், குழந்தையின் அழுகை,
பெரியவன் உதடுகள் புரிந்த இன்னல்,
இவற்றுடன் மாலை ஏழுமணி ஆயிற்று.

* * *

வேலைக் காரிகள் பாலைக் காய்ச்சி
நாலைந்து செம்பு நன்றாய்க் குடித்தபின்,
தலைவியை எழுப்பித் தந்தார், குடித்தாள்!
பெரியவன் குடிப்பது சரியல்ல என்றே
இருபணிப் பெண்டிரும் இருசெம்பு குடித்தார்.
அருமை யான அண்ணனை எழுப்பி
ஒருசெம்பு காப்பி தரும்படி தலைவி
இயம்பினாள். சங்கிலி எழுப்பினாள். எழுப்பி
காப்பி கீப்பி சாப்பிடு கின்றீரா
ஏற்பாடு செய்யவா என்று கேட்டாள்.
வேலைக் காரியின் விருப்பப் படி அவன்
வேண்டாம் என்று விளம்பி விட்டான்.

*

18. மஞ்சள்தாள் திருமணத்தாள்தானே வேறென்ன?
காகிதம் படிக்கையில் தலைவர் வருகிறார்.
அண்ண னும்தங் கையும் நெருங்கியே
பிறந்த ஊர்க் கதைகள் பேசலா னார்கள்:
"நமது வீட்டின் நாலாவது வீட்டுக்
கமலத் துக்குக் கண்ணாலம் என்று
காயிதம் வந்தது கண்டீரா?" என்றுதன்
அண்ணனைக் கேட்டாள். அண்ணன் சிரித்துக்
"கமலம் இறந்து கணக்கிலா நாட்கள்
ஆயின" என்றான். அதுகேட்டு மங்கை
இல்லை அண்ணா இதோ பாருமென்று
மஞ்சள் உறைக்குள் வந்த அஞ்சலைக்
கொண்டு வந்து கொடுத்தாள்; அதை அவன்
மேலுறை கிழித்து நாலுசொல் படித்தான்.
அதற்குள் காரும் பொதுக்கென்று வந்தது.
வீட்டுத் தலைவர் வீட்டில் நுழைந்தார்.
சாய்வு நாற்காலியில் சலிப்புடன் சாய்ந்தார்.
"ஐதராப் பாக்கம் அவன் போய்விட்டான்.
பணமும் போனது; பற்றாக் குறைக்கோ
இன்று ரூபாய் இருபத் தைந்தும்,
பட்டினி யோடு பறந்து திரிந்த
தொல்லையும் வீணாய்த் தொலைந்தன" என்றார்.
அந்த நேரம் அண்ணன் அங்கே
திருமண அழைப்பை விரைவாய்ப் படித்தான்.
ஏட்டினில் இருந்த தென்ன வென்றால்:
"அன்புடை யவரே அவ் வாசாமி
ஐந்து நாளில் ஐதராப் பாக்கம்
போவதாய்த் திட்டம் போட்டிருக் கின்றான்.
கடிதம் இதனைக் கண்ட வுடனே
வந்தால் தொகையை வட்டியும் முதலுமாய்
வாங்கி விடலாம், வந்து சேரவும்.
அங்கவன் போனபின் இங்குநீர் வருவது
வீணே இங்ஙனம் வீராசாமி."
*

19. தலைவர் எரிச்சல்; இருவர் சண்டை 
வந்த அண்ணனும் போய்விட்டான்.
எப்போது வந்த திந்தக் கடிதம்
என்று தலைவர் எரிச்சலாய்க் கேட்டார்.
ஏழெட்டு நாள்முன் இங்கு வந்தது.
திருமணத் துக்குச் செல்லமாட்டீர் என்று
அடுப்பங் கரையில் அதனை வைத்தேன்.
இதனா லென்ன என்றாள் தலைவி.
இதுவா திருமணம் என்றார் தலைவர்.
மஞ்சள் கடிதம் திருமணம் அல்லவா?
என்று கூறினாள் எல்லாம் தெரிந்தவள்.
பதரே என்று பல்லவி தொடங்கினார்.
அடக்கென் றெடுத்தாள் அவள்அநு பல்லவி!
"எங்கிருந் தாயடி என்குடிக் கிப்படி
மங்கிப் போக வைத்தாய் காலடி
பொங்க லாண்டி யாகப் போம்படி
புரிவ தெல்லாம் மிகவும் அழும்படி"
எனவே இப்படி முடித்தார் முதலடி!
தானும் தொடங்கினாள் தாளத் தின்படி;
"ஊருக் கழித்தாய் உருப்பட வாநீ
நாட்டுக் கழித்தாய் நலம்பட வாநீ
இனியும் ஊரில் எடுபட வாநீ"
என்று கூறி எழுந்தாள் அம்மை.
இரண்டாம் அடியை இப்படி முடிக்குமுன்
வந்த அண்ணன் வந்த வழியே
சந்தடி யின்றிச் சடுதியிற் சென்றான்.

*

20. தலைவர் கோபித்துக்கொண்டு புறப்படுகிறார்.
வீட்டுக் காரர் மேலும் தொடங்கினார்;
இந்தாடி என்றே எடுத்தடி வைத்துப்
பந்தா டிடுவேன் பார்எனக் குதித்துப்
பல்லைக் கடித்தே பரக்க விழித்தே
கொல்லைக் கோடிக் கோலைத் தேடி
விட்டே னாஎன மீசை முறுக்கிச்
சட்டென இதுதான் தக்க தென்று
துண்டை எடுத்துத் தோளில் போட்டுச்
சுண்டெலி வால்போல் தொங்கும் தலைமயிர்
கோதி நுணுக்காய்க் குடுமி முடித்துக்
காதில் தொங்கும் கடுக்கனைத் துடைத்துச்
"சாப்பிட மாட்டேன் சற்றும் இங்கிரேன்
கூப்பிட நினைத்தால் கொன்று போடுவேன்
இங்கு நான்இரேன் சங்கிலி, தெரிந்ததா!
எங்கே பையன்? இரடா இங்கே.
என்று கூறி - எங்கே செருப்பும்
ஒன்றுதானா? என்றதை அணிந்து,
சென்று பின்பு திரும்பி வந்து
கன்றையும் மாட்டையும் நன்று கருதுநீ
உன்னிடம் குழந்தையை ஒப்பு வித்தேன்
சங்கிலி இன்னும் நான் சாற்றுவ தைக் கேள்;
இப்போ தேநான் இவ்விடம் விட்டுச்
செட்டித் தெருவில் தென்னை மரத்தோ
டொட்டி இருக்கும் ஒருவீட்டருகில்
குட்டிச் சுவரின் கோடியி லிருக்கும்
இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில்
இருப்பேன். நீயோ என்னை அங்கு
வந்து கிந்து வருவாய் கிருவாய்
என்று கூப்பிட எண்ண வேண்டாம்.
அந்த வீட்டெண் அறுபத் திரண்டுதான்
தெருப் பக்கத்தில் இருக்கும் அறையில்
இருப்பேன்; அழைத்தால் வரவே மாட்டேன்."
என்று தலைவர் இரைச்சல் போட்டு
நடைவரைக் கும்போய் இடையில் திரும்பி
அழைப்பார் இல்லை ஆதலால், மீண்டும்
திரும்பிப் பார்த்துத் தெருவொடு சென்றார்.

*

21. சங்கிலி தேற்றல், தலைவியின் தூற்றல்.
சங்கிலி வந்து தலைவியை நோக்கியே
தங்க மான தங்கள் கணவருக்
கிப்படி யெல்லாம் எரிச்சலுண் டாக்குதல்
தப்பா அல்லவா சாற்றுவீர் என்றாள்.
உரைத்தது போதும் உட்கார் என்று
தலைவி சொன்னாள். சங்கிலி அமர்ந்தாள்.

· · ·

மலைக் குரங்கா மனிதரா அவர்தாம்?
கோணங்கி ஆடிக் கொக்க ரித்தார்
ஆணாய்ப் பிறந்தால் அமர்க்கை வேண்டும்
இவர்போல் மனிதரை யான்பார்த்த தில்லை.
சுவரா கல்லா சொல்வதைப் பொறுக்க,
மூச்சு விட்டாலும் ஆச்சா என்கிறார்.
சீச்சி இவரொரு சின்னப் பிறவி
என்றிவ் வாறு பன்றிபோல் உறுமிச்
சென்று சோறுபோடு என்றாள் தலைவி.
*

22. மண்ணெண்ணெய்க் கையோடு சாப்பிடுகிறார்கள்.
சமையல் நன்றாயில்லை என்பதற்குக் காரணம் தோன்றவில்லை.
பையன்நோய் சிறிது படிந்தி ருந்ததால்
பையன் நிமிர்ந்து பசிபசி என்றான்!
பைய னுக்கும் பரிமாறி னார்கள்.
தாயும் பிள்ளையும் சரேலென் றெழுந்தே
இட்டமண் ணெண்ணெய்ப் புட்டியை இடறி
எண்ணெய் சாய்ந்ததால் இச் இச் என்றே
இருவரும் கையால் எடுத்துரு வாக்கிக்
கடிது சமையல் கட்டினை அடைந்தார்.
சோற்றில் ஏதும் சுடுநாற்றம் இல்லை,
சாற்றி லேதும் தவறே இல்லை,
குழம்பில் ஏதுங் குற்ற மில்லை.
அவைகள் சுவையுடன் அமைந்தன எனினும்
அந்த இருவரும் அலம்பாத கையோடு
வந்துட் கார்ந்தார் வழக்கப் படியே.
சோற்றில் ஏதோ சுவை குறைவுற்றது
சாற்றில் ஏதோ தவறு தோன்றிற்று
குழம்பில் ஏதோ குறை தோன்றிற்று
சுவையுடன் அமைந்தவை கவலை விளைத்தன.
வீட்டுக் காரி மிகவும் சினந்து
இவற்றில் இனிமேல் சுவைதனை ஏற்ற
முடியுமா என்று மொழிந்தாள். மொழிந்ததும்,
என்னா லாவ தினியன்று மில்லை
என்று கூறினாள் எதிர் நின்ற சங்கிலி.
உண்டு முடிந்ததும் உள்ள கறியையும்
மீந்த சோற்றையும் வேலைக் காரிகள்
ஏந்தி வீட்டுக் கெடுத்துப் போயினர்.

*

23. வீட்டுக்காரி, பையன் தூக்கம்.
பெரிய பையன் பெட்டி யண்டையில்
கொரகொர வென்று குறட்டை ஏற
மெழுகு போல அழுக்குப் படிந்த
தலையணை மீது தலையை வைத்து
விலகாது மூட்டை வெடுக்கென்று கடிப்பதும்
தோன்றா உணர்வோடு தூங்க லானான்.
ஈன்ற தாயோ ஈன்றகைப் பிள்ளையின்
அண்டையில் படுத்தாள். அலறிற்றுப் பசு;
வைக்கோல் போட மறந்தே னென்றே
ஓடி, வைக்கோலைத் தேடிப் போட்டு
நாடி வந்து நடுவிற் படுத்தாள்.
தெருவில் நாயும் குரைப்பது கேட்டுத்
தெருவின் கதவைச் சென்றுதாழ் இட்டாள்.
நவாப்புக் குதிரை நாடு முழுதும்
சவாரி வந்து தரையில் புரளல் போல்
படுத்துப் புரண்டு பிடித்தாள் தூக்கம்!
*

24. இரவு பத்து மணி; தலைவர் திரும்பி வருகிறார்.
எண்ணெய் இன்றி இருண்டன விளக்குகள்.
இருண்ட வீட்டில் இருளும் குழந்தையும்
அன்றி, மற்றை யனைவரும் துயின்றனர்.
குற்றுயி ராகக் குழந்தை கிடந்தது.
தூற்றும் பழியை ஏற்க அஞ்சி
நள்ளிரு ளானது பிள்ளை சாகாமல்
தன்மடி தனிலே தாங்கிக் கிடந்தது.
சரியாய் அப்போது - இரவு பத்துமணி;
தலைவர் திரும்பித் தம்வீடு நோக்கினார்.
தலைவா சலில்நாய் தான் வரவேற்றது.
வீடு மூடியும் விளக்கவிந் தும்இருள்
காடுபோல் இருப்பது கருதிக் கனைத்தார்.
கனைப்பது கேட்டு மனையாள் வந்து,தாழ்
திறப்பாள் அல்லவா? திறக்கவே யில்லை.
நாயை நோக்கி நவின்றார் தலைவர்
'நீயேன் தெருவில் நிற்கிறாய்' என்று.
நாய் அது கேட்டு 'ஞய்ஞய்' என்றதாம்.
அதற்கும் வழியில்லை அழகிய வீட்டில்.

* * *

கதவைத் தட்டினார் கையின் விரலால்!
பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு!
அழுந்தத் தட்டினார் அங்கை யாலே!
அடித்தார் இடித்தார் படபட வென்றே!
எட்டி உதைத்தார் இருநூறு தடவை!
முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்!
*

25. அண்டை அயலார்க்கு இடையூறு!
சினத்தோடு வந்தவர் சிரிப்போடு திரும்பினர்.
எதுவும் பயன்பட வில்லை ஆயினும்
அண்டை அயலில் அருகில் இருந்தவர்
தக்க தரிகிடத் தாளம் கேட்டுத்
தூக்கம் கலைந்ததால் சூழ்ந்தோடி வந்து
மூக்கில் எரிச்சலை முன்னே நிறுத்தி
என்னாங் காணும் இந்நே ரத்தில்
தச்சுப் பட்டறை வைச்சது போலவும்
அச்சுப் பீப்பாய் அடிப்பது போலவும்
இப்படித் தட்டி இன்னல் விளைக்கிறீர்?
உள்ளே இருப்பவர் உயிரோ டிருந்தால்
கொள்ளுக் கட்டிய குதிரை போல
வாய்திறக் காமலா வம்பு செய்வார்கள்?
என்று கூறி இரைச்சலிட் டார்கள்.
கதவு மிகவும் கனத்த தென்றார்.
"எழுந்து திறப்பாள் என்பதை நீவிர்
எதிர்பார்த் திடவே யில்லை போலும்,
கதவை உடைப்பதே கருத்துப் போலும்!"
என்று சிரித்தே ஏகினார் வந்தவர்.
*

26. கதவு திறக்கப்பட்டது. தலைவர்க்குப் பசி. கூச்சலிட்டுப் பார்த்தார்.
மேலும் கதவிடிப்பு வேலை தொடங்கிற்று.
பனிரண்டு மணிக்குத் தனிப்பெருந் தலைவியின்
சிறுவிரல் தன்னைத் தின்ற திருட்டெலி
பெருவிரல் தன்னைப் பிடுங்கும் போதுதான்
விழித்தாள். காதில் வீதியில் தொலைவில்
புழுவொன்று சருகுமேல் புரள்வது போன்ற
ஓசை தன்னை உற்றுக் கேட்டாள்.
ஆசை ஆம்படை யானா என்றே
மெதுவாய் எழுந்து மெதுவாய் நின்று
மெதுவாய்ப் பெயர்ந்து மெதுவாய் நடந்தே
கோட்டை நடுவின் வேட்டுப் போலத்
தலைவர் இடிக்கும் தடித்த கதவைத்
திறந்து விட்டுத் திரும்பி வந்து
நிறைமுக் காட்டோடு நீட்டிப் படுத்தாள்.
தலைவி விழிப்புடன் தலையசைப் பதையும்
முதல்மகன் கொண்ட முழுத்தூக் கத்தையும்
இருட்டில் விளக்கை ஏற்றிப் பார்த்த
தலைவர் " ஏனடா தம்பி சாப்பாடு -
உண்டா இல்லையா உரையடா" என்றார்.
"சாப்பாட்டுக் கடை சாத்தியாய் விட்டது.
போய்ப் பார்த்துத்தான் புறப்பட்டு வந்தேன்"
என்று கூறினார்! ஏதும் பதிலில்லை.
அத்தனை பேரும் அழிந்தா போனீர்?
ஒருவரும் இல்லா தொழிந்தா போனீர்?
என்று கூறி இரைச்ச லிட்டார்.

*

27. சாப்பாடு இல்லை என்று தெரிந்தபின் 
சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் தலைவர்.
அமைவாய் விளக்கை அங்கையில் தூக்கிச்
சமையல் அறைக்குத் தாமே சென்றார்.
ஏன மெல்லாம் இறக்கி இறக்கிப்
பூனை போலப் புரட்டித் தள்ளிப்
பொரியற் சட்டியைப் போட் டுடைத்துச்
சரியல் சட்டியைத் தட்டென்று போட்டே
எண்ணெய்ச் சட்டியை எடுத்துச் சாய்த்து
வெண்ணெய்த் தாழியை விரியத் தள்ளிச்
சோற்றுப் பானை துடைக்கப் பட்டதைக்
குழம்புச் சட்டி கழுவப் பட்டதைத்
தெரிந்து, பசியோ திருதிரு என்று
எரிவு கொள்ள, இழவோ என்று
திறந்த வற்றைத் திறந்தே போட்டுப்
பெருச்சா ளிக்குப் பிழைப்புண் டாக்கிக்
கூடத் தினிலே குந்திப் பார்த்தும்
பாடிப் பார்த்தும் படிந்து பார்த்தும்
எதுவும் நடவா தென்று தெரிந்தபின்
தலைவர் ஓர் உறுதி சாற்ற லானார்:
சாப்பிட மாட்டேன் சத்தியம் என்று!

*

28. திருடன் வந்து அலமாரி திறந்து, தன்செயலை அமைதியோடு செய்கிறான்.
சரியாய் ஒருமணி இரவில் தலைவர்
தூக்கமும் பசியின் துடிப்பும் விழிப்பும்
இரங்கத் தக்கவாய் இருந்தன. தலைவியோ
கனவால் விழிப்பதும் கண்ணயர் வதுமாய்
இருந்தாள். பையன் சொறிவான், தூங்குவான்!
இந்த நிலைமையில் இவர்கள் இருக்கையில்
திருடன் ஒருவன் தெருப்பக்கத்து
மாடிமேல் ஏறி ஆடா தசையாது
முற்றத்து வழியைப் பற்றி இறங்கினான்.
அவனோ கறுப்புடை அரையிற் கட்டிப்
பிறைபோற் கத்தியும் பிடித் திருந்தான்!
ஓசை யின்றி உள்ளறை புகுந்தான்.
படர்ந்தெரி விளக்கைப் பளிச்சென் றவித்தான்!
அலமாரி தன்னை அங்கையால் தடவினான்!
சாவி யில்லை; தாவி நகர்ந்து
தலைவியின் தலைமாடு தடவினான்; இல்லை!
சாய்வு நாற் காலியில் சாய்ந்திருந் தவரின்
அண்டையில் இருந்த குண்டுப் பெட்டிமேல்
இருந்தது சாவி; எடுத்துச் சென்றே
அலமாரி தன்னை கிலுக்கென்று திறந்தான்!
வீட்டுநாய் அதனைக் கேட்டுக் குலைத்தது!
தலைவர் விழித்தார். தலைவி விழித்தாள்.
பெரியவன் விழித்தான். தெருவில் தொலைவில்
எதையோ கண்டு பதைத்தது நாய் என்று
மதமத வென்று மல்லாந் திருந்தனர்!
சிறிது நேரம் சென்ற பின்னர்
நிறையப் பணத்தாள் நிறையப் பணங்கள்
போட்டுக் கட்டிய பொத்தற் பைகளைக்
கையில் தூக்கினான் கரிய திருடன்.
பொத்தல் வழியே பொத்தென்று சிற்சில
வெள்ளிக் காசுகள் வீழ்ந்த ஓசை
அனைவர் காதையும் அசைத்த தேனும்
"தலைவர் எதையோ தடவு கின்றார்"
என்று தலைவி எண்ணி யிருந்தாள்.
"தலைவி பாக்குத் தடவினாள்" என்று
தலைவர் நினைத்துச் "சரி" என் றிருந்தார்.
பெருச்சாளி என்று பெரியவன் நினைத்தான்.
திருடன் துணியன்று தேடி, அதிலே
பெரும்பணப் பையைப் பெயர்த்து வைத்துக்
கட்டி இடது கையிற் பிடித்து
வலது கையில் வைத்தான் கத்தியை!

*

29. திருடனைத் தேள் கொட்டிற்று. திருடன் இருப்பதைத்
தலைவர் அறிந்து, அங்கிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்தார்.
அவன்தன் காலை அயலில் பெயர்த்தான்;
கெளவிற்றுக் காலை கடுந்தேள் ஒன்று.
கடுந்தேள் அகற்றக் காலை உதறினான்.
தகரப் பெட்டியில் தன்கால் பட்டதால்
தடாரென் றெழுந்த சந்தடிக் கிடையில்
கள்ளன் உட்புறக் கதவில் நுழைந்தான்.
தலைவர் சடுதியில் விளக்கை ஏற்றினார்.
கதவில் திருடன் பதுங்கி யிருப்பது
வெளியில் இடுக்கால் வெளிப்பட் டதினால்
தலைவர் தமது தலையைச் சாய்த்துக்
கத்தியைக் கள்ளனைக் கண்ணால் பார்த்துப்
பின்வாங்கும் போது பெட்டி யின்மேல்
கைத்துப் பாக்கி வைத் திருப்பதைக்
கண்டார்; அதனைக் கையில் எடுத்தார்.
விளையாட் டுக்கு வெடிப்ப தாயினும்
அந்தத் திருடனை அஞ்ச வைக்கலாம்
என்று தலைவர் எண்ணிக் கொண்டார்.

*

30. விளையாட்டுத் துப்பாக்கியை மெய்யானதென்று திருடன் நடுங்கினான். 
ஆனால் பையன், திருடனை உண்மையுணரச் செய்துவிட்டான்.
அந்த வேளையில் அருமைத் தலைவி
"கள்ளனா" என்று வெள்ளையாய்க் கேட்டாள்.
கள்ளன் அதுகேட்டுக் கதவிற் பதுங்கினான்;
கைத்துப் பாக்கியைக் கண்டு நடுங்கினான்.
"என்னைச் சுடாதீர்!" என்று கூறிப்
பணத்தைக் கொடுத்துப் பயணப் படவும்
பண்ணினான் முடிவு! பையன் அப்போது
நிலைமை யாவும் நேரில் அறிந்தும்,
பொய்த் துப்பாக்கியை மெய்த்துப் பாக்கி
என்று நினைக்கும் தன்னருந் தந்தையை
மடையன் என்றெண்ணி வாளா யிருந்தான்.
"எடுத்ததை வைத்துப் பிடியடா ஓட்டம்
சுடுவேன் பாரடா சுடுவேன்" என்று
கைத்துப் பாக்கியைக் காட்டினார் தலைவர்.
அதுகேட்டுப் பெரியவன் "அப்பா! அப்பா.
அத்துப் பாக்கி பொய்த் துப்பாக்கி;
தக்கை வெடிப்பது தானே" என்றான்.
திருடனுக்கு அச்சம் தீர்ந்து போயிற்று.
மெதுவாய் நடந்து வெளியிற் செல்கையில்
இதுவா தெருவுக்கு ஏற்ற வழியென்று
திருடன் கேட்டுச் சென்று மறைந்தான்.
திருடன் கையோடு செல்வமும் மறைந்தது.
தலைவியும் பையனும் தலைவர் தாமும்
குலைநடுக் கத்தால் கூவா திருந்தனர்!

*

31. திருடன் போனது தெரிந்தபின், தலைவருக்கு எரிச்சல் வந்தது.
அந்த எரிச்சல் தலைவியைக் கொன்றது.
திருடன் அந்தத் தெருவைவிட் டகன்றதை
ஐய மின்றி அறிந்த பின்னர்,
தலைவர் அலறத் தலைப்பட்டார்; "அடே
கொலைஞனே எனக்குக் குழந்தையாய் வந்தாய்
கைத்துப் பாக்கியால் கள்ளன் நடுங்கினான்
பொய்த்துப் பாக்கி பொய்த்துப் பாக்கி
என்றாய், சென்றான் பொருளையும் தூக்கி"
என்று கூறி, எதிரில் இருந்த
சந்தனக் கல்லைச் சரேலென எடுத்துப்
படுத் திருந்த பையனை நோக்கி
எறிந்தார். பசியும், எரிபோல் சினமும்,
மடமையும் ஒன்றாய் மண்டிக் கிடந்த
தலைவன் எறிந்த சந்தனக் கல்லோ
குறிதவறிப் போய்க் கொண்ட பெண்டாட்டி
மார்பினில் வீழ்ந்தது; மங்கை "ஆ" என்று
கதறினாள்; அ·தவள் கடைசிக் கூச்சல்!

*

32. பெரிய பையன் இல்லை.
< dd> அயலார் நலம் விசாரிக்கிறார்கள்.

குறிதவ றாமல் எறிந்த முக்காலி
பெரியவன் தலைமேல் சரியாய் வீழ்ந்தது.
தலைவர் பின்னும் தாம்விட் டெறிந்த
விறகின் கட்டை வீணே; ஏனெனில்
முன்பெ பெரியவன் முடிவை அடைந்தான்!
அறிவிலார் நெஞ்சுபோல் அங்குள விளக்கும்
எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது.
வீட்டின் தலைவர் விளக்கேற்று தற்கு
நெருப்புப் பெட்டியின் இருப்பிடம் அறியாது
அன்பு மனைவியை அழைப்பதா இல்லையா
என்ற நினைப்பில் இருக்கையில், அண்டை
அயலார் தனித்தனி அங்கு வந்தார்கள்.
எதிர்த்த வீட்டான் என்ன வென்றான்.
திருடனா என்றான் சீனன். விளக்கை
ஏற்றச் சொன்னான் எட்டி யப்பன்.
எதிர்த்த வீட்டின் எல்லிக் கிழவி,
குழந்தை உடல்நலம் குன்றி இருந்ததே
இப்போ தெப்படி என்று கேட்டாள்.
விளக்கேற் றும்படி வீட்டுக் காரியை
விளித்தார் தலைவர்; விடையே இல்லை!
என்மேல் வருத்தம் என்று கூறிப்
பின்னர் மகனைப் பேரிட் டழைத்தார்;
ஏதும் பதிலே இல்லை. அவனும்
வருத்த மாய்இருப் பதாய் நினைத்தார்!
அயல்வீட் டார்கள் அகல்விளக் கேற்றினார்.
கிழவி முதலில் குழந்தையைப் பார்த்து
மாண்டது குழந்தை மாண்டது என்றாள்!
மனைவியும் பையனும் மாண்ட சேதி
அதன்பின் அனைவரும் அறிய லாயினர்.
தெருவார் வந்து சேர்ந்தார் உள்ளே.
ஊரினர் வீட்டின் உள்ளே நுழைந்தார்.
அரச காவலர் ஐந்துபேர் வந்தார்.
ஐவரும் நடந்ததை ஆராய்ந் தார்கள்.

*

33. கல்வியில்லா வீடு இருண்ட வீடு.
எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
இல்லா வீட்டை இருண்டவீ டென்க!
படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின்
துடிப்பிலார் நிறைந்த சுடுகா டென்க!
அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம்
நெறி காணாது நின்ற படிவிழும்!
சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம்
வித்தால் விளைவன மேன்மை, இன்பம்!
செல்வம் கடல்போல் சேரினும் என்பயன்?
கல்வி இல்லான் கண் இலான் என்க.
இடிக்குரற் சிங்கநேர் இறையே எனினும்
படிப்பிலாக் காலை நொடிப்பிலே வீழ்வான்!
கல்லான் வலியிலான்; கண்ணிலான்; அவன்பால்
எல்லா நோயும் எப்போது முண்டு.
கற்க எவரும்; எக்குறை நேரினும்
நிற்காது கற்க. நிறைவாழ் வென்பது
கற்கும் விழுக்காடு காணும்; பெண்கள்
கற்க! ஆடவர் கற்க! கல்லார்
முதிய ராயினும் முயல்க கல்வியில்!
எதுபொருள் என்னும் இருவிழி யிலாரும்
படித்தால் அவர்க்குப் பல்விழி கள்வரும்.
ஊமையுங் கற்க ஊமை நிலைபோம்!
ஆமைபோல் அடங்கும் அவனும் கற்க
அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்!
கையும் காலும் இல்லான் கற்க
உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்.
இல்லார்க் கெல்லாம் ஈண்டுக்
கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே!

*

முற்றும். 

திங்கள், 14 ஜூன், 2010

அமராவதி அணை

அமராவதி அணை


அமராவதி அணை இந்தியா, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில்அமராவதிநகரில் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 17இல் 25 கிமீ (15.53 மை) தொலைவில் உள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆழமான அணையால் பரந்த நீர்த்தேக்கம்ஏற்பட்டுள்ளது. இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச்சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் (Mugger Crocodile) பண்ணை உள்ளது. பல்வகை மீன் இனங்களும் இயற்கையாக வளர பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது. [2]

வரலாறு

திருமூர்த்தி அணையின் தெற்கே அமராவதி ஆற்றின் குறுக்கே 1957ஆம் ஆண்டு கு. காமராஜ்முதலமைச்சராக இருந்தபொழுது கட்டப்பட்டது. 4 டி. எம். சி இருந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு தற்போது தூர் சேர்தலால் 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது.[3] இந்த அணை வேளாண்மைக்காகவும் வெள்ளக்கட்டுப்பாட்டிற்காகவும் முதன்மையாகக் கட்டப்பட்டது. 2005 - 2006 நிதியாண்டில் இத்திட்டப் பகுதியில் வணிக விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 43,51,000 என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.[4] 2003-04 ஆண்டில், அணையின் பயன்பாட்டை கூடுதலாக்கதமிழ்நாடு மின்சார வாரியம் 4 மெகாவாட் திறனுள்ள நீர் மின் ஆற்றல் மின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டது;[5] இந்நிலையம் தற்போது இயங்கி வருகிறது.




மீன்வளம்

இங்கு உள்ளூரல்லாத திலாப்பியா வகை மீன்கள்1950களில் விடப்பட்டு 1970களில் மாநிலத்தின் மிக கூடுதலான மீன்பிடி இடமாக விளங்குகிறது. [2] தற்போது இங்கு பிடிக்கப்படும் மீன்களில் பெரும்பான்மையாக திலாப்பியா மீன்கள் உள்ளன.[6]. மீன்வலைகள் வீசப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஒரு மீனவர் ஒருநாளைக்கு 20 கிலோ வரை மீன் பிடிக்க முடிகிறது.ஆண்டுக்கு 110 டன் மீன்கள் கிடைக்குமென வனத்துறை மதிப்பிடுகிறது.[7] 1972ஆம் ஆண்டில் ஆண்டொன்றிற்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 168 கிலோ கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. [8]
மீன்வளத்துறை இங்குள்ள பழங்குடியினருக்கு மீன்பிடிக்க உரிமை வழங்குமுகமாக அமராவதிநகர் பழங்குடி மீனவர் கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர். 2007ஆம் ஆண்டு கரட்டுப்பதி பழங்குடி மக்கள் 50 பேர் இச்சங்கத்தில் இணைந்து அவர்களில் எட்டு பேருக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. [9]

முதலைகள்








சேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் என அழைக்கப்படும் மக்கர் முதலைகள் இங்கு பிடிபடாத நிலையில் இயற்கையாக விடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை மீன்கள் பிற ஊர்வன மற்றும் சிறிய,பெரிய பாலூட்டிகளை உண்டு வாழ்கின்றன.சிலநேரங்களில் மனிதர்களுக்கும் இவை தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவற்றின் இருப்புத்தொகை 60 பெரியவைகளாகவும் 37 சற்றே இளையவையாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. [10] இங்குள்ள மீனை உண்டு வாழும் பிற உயிரினங்கள்:சிறு ஓட்டர்கள் (Oriental Small-clawed Otter), இந்திய நீர் காகங்கள், இந்திய ஆமைகள்[2].
அணையிலிருந்து ஒரு கி.மீ முன்னரே அமராவதி சாகர் முதலைப் பண்ணை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு குட்டி முதலைகளை வளர்த்து பெரியவையானதும் இயற்கைச்சூழலில் விடப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின் முட்டைகள் எடுத்து வரப்பட்டு இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன. இங்கு சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம். இங்கு 98 முதலைகள் (25 ஆண்+ 73 பெண்)பிடிபடு நிலையில் பராமரிக்கப்படுகின்றன.[11][12]

வருனர் தகவல்

அணையில் அழகான பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் உயரமான படிகளில் ஏறி ஆனைமலை மற்றும் பழனிமலை பகுதிகளைக் காண இயலும். இது மாவட்ட சுற்றுலா மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.[13]
பூங்காவும் முதலைப்பண்ணையும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துள்ளது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 50 காசுகளாகவும் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு 25 காசுகளாகவும் உள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக 96 கிமீ (59.65 மை) தொலைவில் உள்ளது.முதலைப்பண்ணை அருகேயுள்ள வனத்துறை ஓய்வகத்தில் நான்கு பேர் தங்க இடவசதி உள்ளது. இருவர் தங்க ஒரு நாளுக்கு ரூ.150 வாடகை வசூலிக்கப்படுகிறது.

குறிப்புகள்
  1. ↑ 1.0 1.1 தமிழ்நாடு அரசு, நீர்த்தேக்க நிலை.[1]
  2. ↑ 2.0 2.1 2.2 Whitaker Rom, Whitaker Zai (1989). Crocodiles, Their Ecology, Management, and Conservation. Madras Crocodile Bank, Madras, India.: IUCN/SSC Crocodile Specialist Group, Phil Hall, International Union for Conservation of Nature and Natural Resources. பக். 278. ISBN 2880329876, 9782880329877.http://books.google.com/books?id=97oE6gTFW8EC&pg=PA278&lpg=PA278&dq=tilapia+%22Amaravathi+reservoir%22&source=web&ots=f-XkHZUttL&sig=V_rinXqD68jA9hYAxrqF-P_v6ZI&hl=en&sa=X&oi=book_result&resnum=6&ct=result#PPA276,M1. Retrieved on 2008-09-30.
  3.  "Farmers worried over low water level" Gunasekaran M., The Hindu, Feb 16, 2007 [2]
  4.  Tamil Nadu Budget Summary, 2005 -2006 [3]
  5.  Tamil Nadu State Planning Commission, Annual Plan, Chapter 11 Infrastructure Development & Tourism, 2004[4]
  6.  Gopalakrishnan, V. Ph.D., "Ethical, Legal and Social Issues Facing Capture Fisheries", Eubios Journal of Asian and International Bioethics 10 (2000), 77-81.[5]
  7.  M. Gunasekaran
  8.  Sreenivasan, A., 1972. Energy transformations through primary productivity and fish production in some tropical freshwater impoundments and ponds. Pages 505–514 in Z. Kajak and A. Hillbricht-Ilkowska (editors) : Productivity problems in freshwaters. Polish Scientific Publishers, Warsaw, Poland. referred to in:Ecological Studies in Tropical Fish Communities By Ro McConnell, R. H. Lowe-McConnell, Cambridge University Press, 1987, p.277, ISBN 0521280648, 9780521280648, 382 pages. [6]
  9.  M. Gunasekaran, The Hindu, Coop. society for tribal fishermen formed, 2007-12-25 [7]
  10.  Andrews
  11.  Tamil Nadu Forest Dept, Amaravati Sagar Crocodile Farm [8], 2007
  12.  Andrews,Harry V., Status and Distribution of the Mugger Crocodile in Tamil Nadu [9]
  13.  Around Pollachi- Anamalai Wildlife Sanctuary: [10]



நன்றி http://ta.wikipedia.org

அணுஉலை விபத்து இழப்பீட்டு சட்டம் - சொந்த செலவில் சூனியம்‏

அணுஉலை விபத்து இழப்பீட்டு சட்டம் - சொந்த செலவில் சூனியம்‏

உலகின் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழலியலும், அது சார்ந்த சட்டவியலும் பெரு வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படை அம்சங்களாக “முன்னெச்சரிக்கை கோட்பாடு” (Precautionary Principle) மற்றும் “சீரழிப்பவரே இழப்பீடு செலுத்த வேண்டும்” (Polluter Pays) ஆகிய கோட்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன.


அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியதும், சூழலை மாசுபடுத்தக்கூடியதுமான பல தொழில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டுக்கு பிறகு ஒரு புதிய அணுஉலைகூட அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அழியா ஆற்றல் மூலங்களான சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கும் வழிமுறைகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் நடைமுறையில் பின்பற்றப் படுவதில்லை. இதற்கு உதாரணமாக போபால் விஷவாயு விபத்தைக் கூறலாம். 1984ஆம் ஆண்டில் நடந்த இந்த விபத்தின் காரணமாக சுமார் 15 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தனியாக நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்று கூறிய மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அரசே வழக்கு தொடுக்கும் என்று அறிவித்தது. ஆயினும் இம்மக்களுக்கான தீர்வு விபத்து நடந்து 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் முழுமையாக கிடைக்கவில்லை. இறையாண்மை மிக்க இந்தியாவின் நாடாளுமன்றமுமம், நீதி மன்றை அமைப்புகளும், பிற அதிகார அமைப்புகளும் போபால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமே இழைத்து வருகின்றன. போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் வாரிசுகளும் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினால் தடியடிகளும், சிறைத்தண்டனைகளுமே பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்த விபத்திலிருந்து இதுவரை இந்தியா எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. நாட்டிலுள்ள அணுமின் நிலையங்களும் போபாலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. ஆபத்து மிகுந்த இந்த அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவையோ, சிக்கனமானவையோ, ஆற்றல்மிகுந்தவையோ அல்ல என்பதை சூழலியல் நிபுணர்கள் பலமுறை நிரூபணம் செய்துள்ளனர். எனினும் இந்த அணுஉலைகளை தொடர்ந்து இயக்குவதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இன்றைய நிலையில் அணுமின் நிலையங்களில் விபத்தே ஏற்படாது என அரசு உட்பட யாரும் உறுதி கூற முடியாது. அணுமின் நிலையங்கள் இயங்குவது நிகழ்கால ஆபத்து. அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகள் எதிர்காலத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கான ஆபத்தாக விளங்கும். இதை அணுசக்தி ஆதரவாளர்கள் யாரும் மறுப்பதும் இல்லை. இவ்வளவு ஆபத்தான அணுசக்தி தேவைதானா? என்ற கேள்விக்கு நேரடியான பதில் அளிப்பதும் இல்லை.

இந்நிலையில் அணுமின் உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு அளிப்பது குறித்த சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மனிதர்களுக்கு பாதிப்பே இல்லாத வகையில் மின்சக்தி தயாரிக்கும் வழியை கண்டுபிடிப்பதைவிட்டு இழப்பீடு தருவதற்காக ஒரு சட்டமா என்று சினம் கொள்ளாதீர்கள். இது நீங்கள் நினைப்பதைப்போல பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான சட்டம் அல்ல.

அதற்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் நயவஞ்சக திட்டத்தை, ஒரு சட்டமாக மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு இதற்கான தேவை குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் இயங்கும் அனைத்து அணு உலைகளையும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்திக் கழகம் என்ற அமைப்பே இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளோ, நிறுவனங்களோ இணைந்து செயல்படுகின்றன. இவற்றில் அமெரிக்காவே இந்தியாவில் அதிகம் முதலீடு செய்வதற்கு முனைந்து செயல்படுகிறது. இந்த முதலீட்டுத் தொகையும், அதற்குரிய லாபமும் சிறிதும் குறையாமல் கிடைக்கவேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. விபத்துகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதன் மூலம் தங்கள் வருவாய்க்கு இழப்பு ஏற்படக்கூடாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே விபத்துகளுக்கான இழப்பீடு வழங்குவதிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்தன.

இதையடுத்து, “The Civil Liability for Nuclear Damage Bill, 2010” என்ற பெயரிலான “அணுஉலை விபத்து இழப்பீட்டு வரம்பு நிர்ணயிக்கும் சட்ட”த்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சட்டத்தின் 6வது அம்சம் அணு உலை விபத்துக்கான இழப்பீட்டிற்கான உச்சவரம்பு அதிகபட்சமாக சுமார் ரூபாய் இரண்டாயிரத்து நூறு கோடி (2100 கோடி ரூபாய்) என்று நிர்ணயம் செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் இதைப்போல சுமார் 23 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த 2100 கோடி ரூபாயிலும் வெறும் 500 கோடி ரூபாயை மட்டும் அந்த அணுஉலைக்கான தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்கள் செலுத்தினால் போதுமானது. (அதையும் அந்த நிறுவனங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் வசூலித்துவிடும் என்பது வேறு கதை!) மீதித் தொகையான சுமார் 1587 கோடி ரூபாயை இந்திய அணுசக்தி கழகம் என்ற பொதுத்துறையின் பெயரால் இந்திய அரசு வழங்கி விடும். இதற்கான தொகை எங்கிருந்து வரும் என்று கேட்கிறீர்களா இந்திய குடிமக்கள் கட்டும் பல்வேறு வரிகளிலிருந்து திரட்டப்படும் அரசு நிதிதான், இந்தியர்களுக்கு பேரழிவு ஏற்படும்போது வெளிநாட்டு நிறுவனங்களை காப்பாற்றும் நோக்கத்தில் செலவழிக்கப்படும்.

இது போன்ற பேரழிவுகளுக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களே காரணம் என்று நிரூபிக்கப்பட்டால்கூட அந்த நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமையும் இந்திய குடிமக்களுக்கு இந்த சட்டத்தின் வாயிலாக மறுக்கப்படுகிறது. (பிரிவு 17)

உண்மையைச் சொல்லப்போனால் இந்த சட்டம், அணு உலை விபத்து ஏற்படும் பட்சத்தில் அது குறித்து விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய நீதிமன்றங்களிடம் இருந்தே பறித்து விடுகிறது. (பிரிவு 35)

விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிப்பதற்காக அணு உலை பாதிப்பு இழப்பீடு ஆணையம் அமைக்கப்படும். இதன் ஆணையர்கள் மேற்கொள்ளும் முடிவுகளே இறுதியானவை. இதற்கு எதிராக நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஒரு அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதன் தீய விளைவுகள் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும். இம்மாதிரியான விளைவுகள் குறித்து இதுவரை எந்த முழுமையான ஆய்வும் இதுவரை நிறைவு பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு கோருவதற்கு வெறும் பத்தாண்டு காலத்தை மட்டுமே காலக்கெடுவாக விதிக்க இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது. அதாவது அணுஉலை விபத்து ஏற்பட்ட தினத்திலிருந்து 10 ஆண்டுகளுக்குள் மட்டுமே இழப்பீடு கோர முடியும் என்று இந்த சட்டம் வரம்பு விதிக்கிறது. (பிரிவு 18) விபத்து ஏற்பட்டு அதன் விளைவான தீய விளைவுகள் 10 ஆண்டுகள் கழித்து தெரியவந்தால் அதற்காக இழப்பீடு கோர முடியாது என்பதுதான் இந்தப் பிரிவின் கருப்பொருள்.

இது போன்று இந்திய மக்களுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச கடமைகள் ஏதும் இந்தியாவிற்கு இல்லை என்ற போதிலும் அமெரிக்க எஜமானர்களுக்கு அடிபணிந்து நடக்கும் இந்திய ஆட்சியாளர்களின் பணிவு வேட்கையே இத்தகைய சட்டத்தை இங்கு கொண்டு வரமுயற்சிக்கிறது.


இந்த சட்டத்திற்கான முன்வடிவை பரிசீலனை செய்த பிரபல அரசியல் அமைப்புச் சட்டநிபுணர் சோலி சொராப்ஜி, “இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் பல முன்மாதிரி தீர்ப்புகளுக்கும் எதிரான இந்த சட்டத்திற்கான தேவை எதுவும் இன்று இல்லை: இந்த சட்டம் யாருடைய நிர்பந்தத்தில் கொண்டு வரப்படுகிறது என்பதும் புரியவில்லை!” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் அணுசக்தி தொடர்பான பல்வேறு வர்த்தகங்களை செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் கொண்டுவர முயற்சிக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தைப்போல ஐரோப்பிய நாடுகளிலோ, வேறு வளரும் நாடுகளிலோகூட எந்த சட்டமும் இல்லை.

சாமானியர்களுக்கும் சட்டத்துக்கும் தொடர்பில்லை என்ற தவறான கருத்து சமூகத்தில் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தை பயன்படுத்துகின்றனரே தவிர, சட்டத்தை உருவாக்கும் பணி சாமானிய மக்களின் பெயரால், மக்களின் பிரதிநிதிகளால்தான் நடைபெறுகிறது. எனவே சமூக ஆர்வம் கொண்ட எவரும் சட்டத்தை திறனாயும் நோக்கத்தில் படித்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்! மேலும் மக்களுக்கு எதிரான இது போன்ற சட்டங்களை அனைத்து தளங்களிலும் எதிர்ப்பது, நமது சந்ததிகளுக்கு நாம் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையாகும்